நாட்டு நிர்வாகத்தின் மையமாக மக்கள் இருப்பதால் ஜனநாயகம் வெற்றிகரமாக செயல்படுகிறது: பிரதமர் மோடி பெருமிதம்

2

புதுடில்லி: ''நாட்டின் நிர்வாகத்தில் பொதுமக்களே மையமாக இருப்பதால், இந்தியாவில் ஜனநாயகம் வெற்றிகரமாக செயல்படுகிறது,'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் அமைப்பின் சபாநாயகர்கள் மற்றும் சபை தலைவர்களின் 28வது மாநாடு, டில்லியில் நேற்று துவங்கியது. பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:

காமன்வெல்த் அமைப்பில் உள்ள நாடுகளின் மொத்த மக்கள் தொகையில், 50 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர்.

புதிய பாதை



அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கும், முடிந்த வரையிலான பங்களிப்பை இந்தியா தொடர்ந்து வழங்கி வருகிறது. தன் கூட்டாளி நாடுகளிடம் இருந்து தொடர்ந்து பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ள இந்தியா முயல்கிறது.

தன் அனுபவங்கள், பிற காமன்வெல்த் நாடுகளுக்கும் பயனளிப்பதை இந்தியா உறுதி செய்கிறது. உலகளவில் ஒவ்வொரு தளத்திலும், தெற்கு நாடுகளின் பலன்களுக்காக இந்தியா தொடர்ந்து வலுவாக வாதிடுகிறது.

'ஜி 20' அமைப்புக்கு இந்தியா தலைமையேற்ற போது, தெற்கு நாடு களின் கவலைகளை உலகளாவிய நிகழ்ச்சி நிரலில் இந்தியா பதிவு செய்தது.

உலகம் முன்னெப்போதும் இல்லாத மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் வேளையில், உலகளாவிய தெற்கு நாடுகள் புதிய பாதைகளை வகுப்பதற்கான தருணம் இது.

வலுவான ஜனநாயகத்தை பேணுவதில், சபாநாயகர்கள் மற்றும் சபை தலைவர்களின் பங்கு மிகவும் அவசியம்.

நாட்டின் நிர்வாகத்தில், மக்களே மையமாக இருப்பதால், இந்தியாவில் ஜனநாயகம் வெற்றிகரமாக செயல்படுகிறது.

25 கோடி மக்கள்



இங்கு, பொதுநல உணர்வுடன் அரசு மேற்கொள்ளும் நலத் திட்டங்கள், எந்த பாகுபாடும் இன்றி கடைக்கோடியில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் சென்று சேர்கின்றன. இதனால், சமீபத்திய ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்திய ஜனநாயகத்தின் அளவு மிகவும் அசாதாரணமானது. 2024ல் இந்தியாவின் நடந்த பொது தேர்தலில், 98 கோடி மக்கள் ஓட்டளிக்க பதிவு செய்திருந்தனர்; 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களும், 700-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் தேர்தலில் பங்கேற்றன.

இந்த வாக்காளர் எண்ணிக்கை, சில கண்டங்களின் மக்கள் தொகையை விடப் பெரியது. இந்திய ஜனநாயகம் ஆழமான வேர்களால் தாங்கப்படும் ஒரு பெரிய மரம் போன்றது.



நீண்ட பாரம்பரியம்



விவாதம், உரையாடல் மற்றும் கூட்டு முடிவெடுப்பதில் இந்தியாவுக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. இதனால் தான், ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உள்ளது.

பெண் பிரதிநிதித்துவம் தான், இந்திய ஜனநாயகத்தின் மற்றொரு வலுவான துாண். இன்று இந்திய பெண்கள் ஜனநாயகத்தில் பங்கேற்பது மட்டுமல்லாமல், அதை முன்னின்று வழி நடத்துகின்றனர். நம் நாட்டின் ஜனாதிபதியாக ஒரு பெண் பதவி வகிக்கிறார். இந்த மாநாடு நடக்கும் டில்லியின் முதல்வரும் பெண் தான்.

இந்தியாவின் உள்ளாட்சி மற்றும் கிராமப்புற அமைப்புகளில், 15 லட்சம் பேர் பெண் பிரதிநிதிகள் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில், 42 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த 61 சபாநாயகர்கள், தலைமை அதிகாரிகள் மற்றும் நான்கு பகுதி தன்னாட்சி பெற்ற பார்லிமென்ட்களின் பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர்.

Advertisement