ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை: எலவனாசூர்கோட்டை பகுதி மக்கள் எதிர்பார்ப்பு

உளுந்துார்பேட்டை: ஜன. 16---: எலவனாசூர்கோட்டை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் பொதுமக்கள் உள்ளிட்ட என பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை தொகுதி பிடாகம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி எலவனாசூர்கோட்டை என அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த ஊராட்சி கடந்த 1961ல் உருவாக்கப்பட்டது. ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தவேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கைவிடுத்து வருகின்றனர். ஊராட்சிக்குட்பட்டு கீழப்பாளையம், ரஹீம் தக்கா, மேலப்பாளையம், பல்பல் கான் தக்கா, வண்ணகப்பாடி, எல்லப்பநாயக்கன்பாளையம், என 18 கிராமங்கள் உள்ளது. ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், 15 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். ஊராட்சியில் 8,946 ஆண்களும், 9,080 பெண்களும், இரு திரு நங்கைகள் என மொத்தம் 18, 028 பேர் உள்ளனர். 86 ஊராட்சி பணியாளர்கள் உள்ளனர்.

4,027 வீடுகள், 400 கடைகள், 9 அங்கன்வாடிகள், 9 துவக்கப்பள்ளிகள், ஒரு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இரு தனியார் பள்ளிகள், 4 வங்கிகள், போலீஸ் நிலையம், கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை ஆகியவை இயங்கி வருகின்றன. திங்கள் கிழமை தோறும் காய்கறி வார சந்தை நடந்து வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த எலவனாசூர்கோட்டை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது குறித்து எலவனாசூர்கோட்டை ஊராட்சி மன்ற துணை தலைவர் ஷம்ஷாத் கூறுகையில்,

வளர்ந்து வரும் எலனவனாசூர்கோட்டை வட மாவட்டம், தென் மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதியாக உள்ளது. எலவனாசூர்கோட்டைக்கு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும்.

கடந்த 40 ஆண்டுகளாக எலவனாசூர்கோட்டையை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என 2006ல் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின், அமைச்சர்கள் பெரியசாமி, நேரு, வேலு, மாவட்ட செயலாளர்கள், கலெக்டர்கள், எம்.எல்.ஏ.. என பலரிடமும் கோரிக்கை மனு அளித்து வருகிறேன். பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் பஸ் நிலையம் அமைவதோடு, பேரூராட்சிக்கு அதிக வருவாய் கிடைத்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தடை இன்றி கிடைக்கும். பலருக்கு நேர்முகமாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

எனவே ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தவேண்டும் வேண்டும். இவ்வாறு துணை தலைவர் ஷம்ஷாத் கூறினார்.

Advertisement