பாலமேடு முதல் சூரியூர் வரை அதிரவைத்த ஜல்லிக்கட்டு



தமிழர் பண்பாட்டின் வீர அடையாளமாகவும், ஏறுதழுவுதல் என்ற சங்ககால மரபின் எச்சமாகவும் விளங்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள், இந்த ஆண்டும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் களைகட்டியிருந்தது. குறிப்பாக, இன்று உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேட்டிலும், திருச்சி மாவட்டத்தின் வீர அடையாளமான சூரியூரிலும் நடைபெற்ற போட்டிகள், "வீரத்தின் விளைநிலம் தமிழகம்" என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளன.
Latest Tamil News

காலை 8 மணிக்கே தொடங்கிய இந்தப் போட்டிகள், மாலை அந்தி சாயும் வரை விறுவிறுப்பு குறையாமல் நடைபெற்றன. பாலமேடு மஞ்சள்மலை ஆற்றுத் திடலில், வாடிவாசல் வழியாகச் சீறி வந்த காளைகள் ஒவ்வொன்றும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தன. மதுரை மண்ணின் மைந்தர்கள், காளையின் திமிலைப் பிடித்து அடக்க முயன்ற காட்சிகள் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்தன.
Latest Tamil News
இந்த ஆண்டு சூரியூர் ஜல்லிக்கட்டு ஒரு வரலாற்றுச் சிறப்பைப் பெற்றுள்ளது. தமிழக அரசு சுமார் 3 கோடி ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணித்துள்ள பிரம்மாண்டமான நிரந்தர மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டி இதுவாகும். நவீன வசதிகளுடன் கூடிய இந்த களம், வீரர்களுக்கும் காளைகளுக்கும் ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது.
Latest Tamil News
ஜல்லிக்கட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல; அது ஒரு கௌரவப் போர். இன்று களத்தில் மல்லுக்கட்டிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வாரி வழங்கப்பட்டன:அதிக காளைகளை அடக்கி 'களத்தின் நாயகனாக'த் திகழ்ந்த வீரர்களுக்குப் புத்தம் புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது.வீரர்களிடம் சிக்காமல், மைதானத்தில் நின்று நிதானித்து விளையாடி மிரட்டிய சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் வழங்கப்பட்டது.
Latest Tamil News
இவை தவிர, எலக்ட்ரிக் பைக்குகள், தங்க நாணயங்கள், கட்டில்கள் மற்றும் பீரோக்கள் எனப் பரிசுகள் மழையாகப் பொழிந்தன.
Latest Tamil News
ஜல்லிக்கட்டு என்பது தற்காலத்தில் உருவானது அல்ல. சிந்து சமவெளி நாகரிக காலத்திலிருந்தே காளைகளுடன் மனிதன் போராடும் மரபு இருந்ததை அகழ்வாராய்ச்சி சான்றுகள் உணர்த்துகின்றன. ஆயர் குல இளைஞர்கள் தங்களின் வீரத்தை நிரூபித்து, மணப்பெண்ணைத் தேர்வு செய்ய ஏறுதழுவுதல் ஒரு களமாக இருந்தது. 'சல்லி' (நாணயம்) கட்டப்பட்ட துணியைக் காளையின் கொம்புகளில் கட்டி, அதை எடுப்பவரே வெற்றியாளர் எனக் கருதப்பட்டதால் 'சல்லிக்கட்டு' என்பது மருவி 'ஜல்லிக்கட்டு' ஆனதாகவும் கருத்து உள்ளது.
Latest Tamil News
வீர விளையாட்டு என்றாலும், இந்த ஆண்டு பாதுகாப்பு விதிமுறைகள் மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட்டன. காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள், வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனைகள் என அனைத்தும் முறையாக நடந்தன. வாடிவாசல் வழியாக ஒரு காளை வெளிவந்து, அது எல்லைக்கோட்டைத் தாண்டும் வரையிலான அந்தச் சில நொடிகள், மைதானத்தில் நிலவும் நிசப்தமும், காளையின் குளம்படிச் சத்தமும் காண்போர் மெய்சிலிர்க்கச் செய்தன.
Latest Tamil News
தமிழகத்தின் இந்த வீர மரபு, வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல், நாட்டு மாட்டு இனங்களைப் பாதுகாக்கும் ஒரு உன்னத நோக்கோடும் தொடர்வது அதன் தனிச்சிறப்பு.
Latest Tamil News
-எல்.முருகராஜ்.

Advertisement