வங்கிகளில் அடமானக்கடன் வாங்குவோர் கவனிக்க வேண்டியவை!

புதிதாக வீடு வாங்க வங்கிகளில் கடன் பெறுவது பொதுவான நடைமுறையாக உள்ளது. இதில், விண்ணப்பதாரரின் தகுதி, வருமான விபரம், சொத்து குறித்த உண்மை தன்மை போன்ற விபரங்கள் வங்கிகளால் ஆய்வு செய்யப் படுகின்றன.


இதற்காக, கடன் தவணை காலம் முடியும் வரை அந்த சொத்தின் அசல் பத்திரம் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும். தவணை முழுவதும் செலுத்திய பின் வங்கி நிர்வாகம், ஆவணத்தை ஒப்படைப்புக்கான அடமானத்தை ரத்து செய்து, அசல் பத்திரங்களை வழங்கும்.


இது ஒரு நடைமுறை என்றால், ஏற்கனவே வாங்கிய சொத்தை அடமானம் வைத்து கடன் பெறுவதும் பரவலாக புழக்கத்தில் உள்ளது. குறிப்பாக, கல்வி, மருத்துவம், திருமணம் போன்ற காரணங்களால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக சொத்தின் உரிமையாளர்கள் அடமானக்கடன் பெற முன்வருகின்றனர்.



இவ்வாறு அடமானக்கடன் வாங்குவோர், கடன் கிடைத்தால் போதும் என்றும், அதன் பின் தவணை செலுத்தினால் போதும் என்று இருக்கின்றனர். சொத்து அடமானக்கடன் பெறுவோர், அதற்கான அசல் ஆவணங்களை வங்கியிடம் ஒப்படைக்கும் போது, அடமான பத்திரத்தை பதிவு செய்வது அவசியம்.


இதில் சிலர் கடன் வாங்கி, முறையாக தவணை செலுத்தியிருப்பர். ஆனால், தவணைக்காலம் முடிந்து பத்திரத்தை பல முறை அலைந்து வங்கியிடம் இருந்து வாங்கியிருப்பர். ஆனால், அறியாமை காரணமாக, ஆவண வைப்பு அடமான பத்திரத்தை ரத்து செய்ய மறந்து இருப்பர்.


அசல் பத்திரமே வந்துவிட்டதே, அடமான பத்திரம் ரத்து செய்யப்படாவிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது என்று பலரும் நினைக்கலாம். ஆனால், அடமான காலம் முடிந்த பின், அந்த சொத்தை வேறு யாருக்காவது விற்க வேண்டும் என்றாலும், அதில் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்றாலும் ஆவண ஒப்படைப்பு பத்திரம் ரத்து செய்யப்படாதது சிக்கலை ஏற்படுத்தும்.


இது போன்ற சமயங்களில் உங்களின் அவசரத்துக்கு வங்கி அதிகாரிகளை அழைத்தால் அவர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். இதற்கான நடைமுறை மாறிவிட்டது. பணி பொறுப்பு வேறு அதிகாரியிடம் சென்றுவிட்டது. மேலதிகாரி அனுமதி அளிக்க வேண்டும் என்று அலையவிடுவர்.


எனவே, அடமானக்கடன் பெறுவோர், அதற்கான அவண நடவடிக்கைகளை முறையாக முடிக்க வேண்டும் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.

Advertisement