கடைசி நேரத்தில் பணம் மட்டும் பட்டுவாடா; பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காமல் ஏமாற்றம்

- நமது நிருபர் -:


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கடைசி இரு தினங்களில் பணம் மட்டுமே பட்டுவாடா செய்யப்பட்டதால் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 333 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் பொங்கல் பரிசு பெற தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோ, முழு நீள கரும்பு ஒன்று மற்றும் ரூ. 3,000 ரொக்க பணம் அரசு சார்பில் வழங்கப்பட்டது.

முன்னதாக டோக்கன் விநியோகிக்கப்பட்டு ஜன., 8ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.

ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள தெருவாரியாக சுழற்சி முறையில் 14ம் தேதி வரை அந்தந்த ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் ரேஷன் கடையின் முன்பு அதிகாலை முதலே பயனாளிகள் பொங்கல் தொகுப்பை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். துவக்கத்தில் அரசு அறிவித்தபடி அரிசி, சர்க்கரை, கரும்பு, பணம் ஆகிய அனைத்தும் வழங்கப்பட்டது.

ஓரிரு தினங்களிலேயே கரும்பு அனைத்தும் தீர்ந்துவிட்டது. கூட்டம் அதிகமாக உள்ளது என கருதி கடைசி நாட்களில் வாங்கிக் கொள்ளலாம் என காத்திருந்தவர்களுக்கு பெரும்பாலான கடைகளில் கரும்பு கிடைக்கவில்லை.

அதிலும் கடந்த 14 மற்றும் 15ம் தேதிகளில், பணம் மட்டுமே பட்டுவாடா செய்யப்பட்டது. பொருட்கள் கொடுக்கவில்லையே என்று கேட்டால் தாமதமாக வந்ததால் தீர்ந்து விட்டது என காரணம் கூறி திருப்பி அனுப்பினர்.

இது குறித்து விசாரித்த போது பணம் மட்டுமே அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கும் அளவிற்கு வந்ததாகவும் மற்ற பொருட்கள் அனைத்தும் 80 சதவீதம் பேருக்கு மட்டுமே வழங்கும் அளவுக்கு கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இதனால் கடைசி நேரத்தில் வாங்கிக் கொள்ளலாம் என காத்திருந்தவர்கள் மக்கள், பொங்கல் பரிசு தொகுப்பு முழுமை யாக கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Advertisement