ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

34


மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடி, அதிக காளைகளை பிடிக்கும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அலங்காநல்லூரில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் ஸ்டாலின் நேரில் கண்டு களித்தார். அப்போது, அவர் இரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது;
உலகப்புகழ் பெற்றிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்க்கும் போது, நமக்கெல்லாம் வீரம் வருகிறது. அதனை அடக்கும் காளையர்களை பார்க்கும் போது, நமது தமிழ் மண்ணிற்கு ஒரு பெருமையாக இருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியில், வீரம் விளைந்த மதுரை மண்ணில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் மற்றும் தமிழர்களின் அடையாளமாக இந்த வீர விளையாட்டிற்கு, எருது விடும் அரங்கம் கட்டிக்கொடுத்திருக்கிறோம்.

இப்போது ஜல்லிக்கட்டை பார்க்க முதல்வராக வந்திருக்கும் நான், ஏதாவது அறிவிப்பை வெளியிட்டு சென்றால் தான் அனைவருக்கும் திருப்தியாக இருக்கும். ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கும் வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில், கால்நடை பராமரிப்புத்துறையில் உரிய அரசுப் பணியிடங்களுக்கு பணியமர்த்த வழிவகை செய்யப்படும்.

2வது அறிவிப்பாக, தமிழகத்தின் ஜல்லிக்கட்டு காளைகளுக்காக, அலங்காநல்லூரில் ரூ.2 கோடி செலவில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement