ஹைதராபாத்தில் தமிழக பள்ளி இசைக்குழுவினருக்கு அநீதி; தமிழக அரசு மவுனம் கூடாது என்கிறார் அண்ணாமலை

2

கோவை: ஹைதராபாத்தில் பள்ளிகளுக்கு இடையேயான இசை நிகழ்ச்சி போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் அணியினருக்கு அநீதி இழைக்கப்படும் போது, தமிழக அரசு மவுனமாக இருக்கக் கூடாது என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை; ஹைதராபாத்தில் பள்ளிகளுக்கு இடையேயான இசை நிகழ்ச்சி போட்டியில் கோவையைச் சேர்ந்த அவிலா கான்வென்ட் பெண்கள் அணி முதலிடம் பிடித்ததாக முதலில் அறிவிக்கப்பட்டு, சான்றிதழ்கள் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டு விட்டன. ஆனால், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், ரீ-ரிசல்ட் என்ற பெயரில், கோவையைச் சேர்ந்த பெண்கள் அணி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது அப்பட்டமான அநீதி, கடும் கண்டனத்திற்குரிய செயல்.

தெலங்கானா அரசு சார்பில் நடத்தப்படும் இந்தப் போட்டியில், 'நிபுணர் குழு ஆய்வு' என்ற பெயரில் முடிவுகள் மாற்றப்பட்டிருப்பது, மாபெரும் முறைகேடு மற்றும் உள்நோக்கம் கொண்ட செயலாகக் கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், வரும் ஜனவரி 24ம் தேதி டில்லியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தமிழக மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர். அவிலா கான்வென்ட்டை சேர்ந்த இளம் மாணவிகள் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, தமிழக அரசு மவுனமாக இருக்கக்கூடாது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, அவிலா கான்வென்ட் பள்ளியின் உரிமையையும், முதலிடத்தையும் மீட்டெடுக்க வேண்டும். மேலும், எதன் அடிப்படையில் முடிவுகள் மாற்றப்பட்டன என்பதை தெலங்கானா அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement