சினிமா வாய்ப்பு குறைந்து போனது; ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய காரணத்தால் சர்ச்சை!

65

-நமது நிருபர்-

''சினிமாத்துறை, சமூகம் சார்பானதாக மாறி விட்டதால் தான் எனக்கு 8 ஆண்டுகளாக வாய்ப்புகள் குறைந்து விட்டன,'' என்று இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பல்வேறு மொழிகளில் இசை அமைப்பவர். ஆஸ்கார் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றவர்.


அவர் ஒரு ஆங்கில சேனலுக்கு அளித்த பேட்டியில், ''கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. சினிமாத்துறை சமூகம் சார்பானதாக மாறி விட்டது,'' என்று கூறியிருந்தார்.


''இசைத்துறையின் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்களே, அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியுடன் இருக்கின்றனர். இது சமூகம் தொடர்பானதாகவும் இருக்கலாம்,'' என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் சமூகத்திற்கு எதிராக பாலிவுட்டில் பாகுபாடு நிலவுகிறதா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.


சர்ச்சை பேட்டி





அவரது இந்த பேட்டி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையுடன் தொடர்புடைய பலர், அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சமூகம் ஒரு காரணியா






எழுத்தாளர் ஷோபா டே கூறுகையில், ''அவரது கருத்து அபாயகரமானது. ஏன் அவர் இப்படி சொன்னார் என்று எனக்குத் தெரியாது. நான் கடந்த 50 ஆண்டாக பாலிவுட்டை பார்த்து வருகிறேன். சமூக ரீதியான பதட்டம் இல்லாத ஒரே இடம் பாலிவுட் மட்டும் தான். உங்களுக்கு திறமை இருந்தால் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். திறமை இல்லையெனில், கிடைக்காது; அதற்கு சமூகம் ஒரு காரணியாக இருக்க முடியாது. இவ்வளவு திறமையான, பக்குவப்பட்ட ஒருவர், இப்படி சொல்லி இருக்கக்கூடாது,'' என்றார்.


பிரபல திரைக்கதை ஆசிரியர் ஜாவேத் அக்தர் கூறுகையில், ''ரஹ்மான் கூறியதை நான் ஏற்க மாட்டேன். சினிமாத்துறை சமூக சார்புடையதாக மாறி விட்டதாக நான் கருதவில்லை. ரஹ்மான் இப்படி ஒன்றை சொல்லி இருக்கிறார் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை.


அச்சம்






''ரஹ்மான் பெரிய இசை அமைப்பாளர். பலரும் அவரை மதிக்கிறார்கள். பலரும் அவரை நம்மால் கையாள முடியாது என்று அச்சப்படுகிறார்கள். அதனால் தான் பலரும் அவரிடம் இருந்து தள்ளி இருக்கிறார்கள்,'' என்றார்.



நடிகை கங்கனா ரனாவத் கூறுகையில், ''எனது எமர்ஜென்சி படத்துக்கு இசை அமைக்க வேண்டும் என்று கேட்கச் சென்றபோது, ரஹ்மான் என்னை சந்திக்கவே மறுத்து விட்டார். பிரசார படத்துக்கு பணியாற்ற முடியாது என்றும் கூறி விட்டார். ரஹ்மான் போன்ற பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட மனிதரை நான் கண்டதில்லை,'' என்றார்.

Advertisement