பாஜவின் புதிய தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வானார் நிதின் நபின்

9


புதுடில்லி: பாஜவின் புதிய தேசியத் தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.


பாஜவின் தலைவராக இருந்த நட்டாவின் பதவிக்காலம் 2024 லோக்சபா தேர்தலுடன் முடிவடைந்துவிட்டது. அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இச்சூழ்நிலையில் பாஜவின் செயல் தலைவராக நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டார்.


இந்நிலையில் புதிய தேசியத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜ அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று நடந்தது. இதில் புதிய தேசியத் தலைவராக நிதின் நபினுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நட்டா உள்ளிட்டோர் முன்மொழிந்தனர். டில்லி முதல்வர் ரேகா குப்தா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்வர் தமி உள்ளிட்ட பல்வேறு பாஜ ஆளும் மாநில முதல்வர்கள் நிதின் நபினுக்கு ஆதரவாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.


இந்நிலையில், காலக்கெடு இன்றுடன் முடிந்த நிலையில், புதிய தேசியத் தலைவர் பதவிக்கு நிதின் நபினைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என தேர்தல் நடத்தும் அதிகாரி லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நிதின் நபின் பாஜவின் புதிய தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்வு ஆகியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை( ஜனவரி 20) வெளியிடப்பட உள்ளது. அன்றைய தினமே நிதின் நபின் புதியத் தலைவருக்கான பொறுப்புகளை ஏற்பார்.

Advertisement