முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு உரிய மாநிலமாக உள்ளது தமிழகம் உலக பொருளாதார மன்ற அறிக்கையில் தகவல்

டாவோஸ்: :இந்தியாவில் முதலீடு செய்வதற்கு நம்பிக்கைக்கு உரிய மாநிலமாக தமிழகம் திகழ்வதாக டபிள்யு.இ.எப்., எனப்படும் உலக பொருளாதார மன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் குளோபல் வேல்யூ செயின்ஸ் அவுட்லுக் 2026 அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலக வினியோக தொடர், கட்டமைப்பு ரீதியாக ஏற்ற, இறக்கம் மிகுந்த காலத்துக்குள் நுழைந்துள்ளது.

முன்னுரிமை இதனால், நிறுவனங்களும், அரசுகளும் எங்கு முதலீடு செய்வது, எங்கு உற்பத்தி செய்வது என்பதை மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.

தற்போது நான்கில், மூன்று பங்கு முதலீட்டாளர்கள், வளர்ச்சிக்கு நிலைத்தன்மையை முன்னுரிமையாக கருதுகின்றனர்.

அந்த வகையில், இந்தியாவின் தமிழகத்தில் நிலையான மற்றும் கணிக்கக்கூடிய முதலீட்டு சூழல் நிலவுகிறது.

இதற்கு, அரசியல் ஸ்திரத்தன்மை, தொடர்ச்சியான ஒழுங்காற்று நடவடிக்கைகள், ஒவ்வொரு துறைக்கும் ஏற்ற வகையிலான ஊக்குவிப்பு நடவடிக்கைகள், வலுவான உள்கட்டமைப்பு, திறமை வாய்ந்த மனித வளம் ஆகியவை காரணங்களாக உள்ளன. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தின் முன்கூட்டியே கணிக்கக்கூடிய பொருளாதார கொள்கைகள், நீண்டகால உலக முதலீடுகளை ஈர்த்து வருகின்றன.

அங்கு தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வது எளிமையாக இருப்பதாகவும், அரசின் ஒப்புதல்கள் விரைவாக கிடைப்பதாகவும் ஜப்பானிய நிறுவனங்கள் கூறுகின்றன.

தயார் நிலை வியட்நாமின் மின்சார வாகன உற்பத்தியாளரான வின்பாஸ்ட், ஆண்டுக்கு 50,000 வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்ட ஆலையை, தமிழகத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ளது. 24 முதல் 36 மாதங்கள் வரை ஆகியிருக்க வேண்டிய இந்த ஆலையின் கட்டமைப்பு, வெறும் 17 மாதங்களில் நிறைவடைந்துள்ளது.

இதற்கு தமிழக அரசின் கொள்கைகளும், தயார் நிலையில் இருக்கும் பணியாளர்களும் தான் காரணம். இந்த நிலையான, முதலீட்டுக்கு உகந்த சூழல், உலக வினியோக தொடரில், நம்பகமான தொழில் களமாக தமிழகத்தை நிலைநிறுத்தி உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement