கவர்னர் ஏன் வெளிநடப்பு செய்தார்: லோக் பவன் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

122

சென்னை: கவர்னர் பேசும் போது அவரது மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டதால், பேச அனுமதிக்கப்படவில்லை என கவர்னர் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறியதாக லோக் பவன் (கவர்னர் மாளிகை) விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து லோக் பவன் வெளியிட்ட அறிக்கை: கவர்னர் பேசும் போது அவரது மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டதால், பேச அனுமதிக்கப்படவில்லை; உரையில் பல ஆதாரமற்ற கூற்றுகளும், தவறான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. மக்களை பாதிக்கும் பல முக்கிய பிரச்னைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன; மாநிலத்திற்கு ரூ.12 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறுவது உண்மைக்கு மாறானது. பல முதலீட்டாளர்களுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகிதத்திலேயே உள்ளன. உண்மையான முதலீடு மிகக் குறைவாகவே உள்ளது.

பெண்களின் பாதுகாப்பு




முதலீட்டு தரவுகள், தமிழக முதலீட்டாளர்களுக்கு ஈர்ப்பு குறைந்த மாநிலமாக மாறி வருவதை காட்டுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு நேரடி முதலீடு பெறும் மாநிலங்களில் தமிழகம் நான்காவது இடத்தில் இருந்தது; இன்று ஆறாவது இடத்தைப் பிடிக்க போராடி வருகிறது; பெண்களின் பாதுகாப்பு குறித்து உரையில் எந்த குறிப்பிடும் இல்லை.


போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான பாலியல் வன்முறை வழக்குகள் 55% க்கும் மேல் அதிகரித்துள்ளன; பெண்களைத் தொந்தரவு செய்வது 33% க்கும் மேல் உயர்ந்துள்ளது; போதைப் பொருட்கள் பரவலும், பள்ளி மாணவர்கள் உட்பட இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தின் அதிகரிப்பும் மிகக் கடுமையான பிரச்னையாக உள்ளது.

தற்கொலை




ஒரு ஆண்டில் மட்டும் போதைப் பழக்கத்தால் 2,000க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர். இதில் பெரும்பாலும் இளைஞர்கள் தான். இது நமது எதிர்காலத்தையே பாதிக்கிறது. ஆனால் இது அலட்சியமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது; தலித் மக்களுக்கு எதிரான அத்துமீறல்கள் மற்றும் தலித் பெண்கள்மீது பாலியல் வன்முறைகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.


இதுவும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது; மாநிலத்தில் ஒரு ஆண்டில் சுமார் 20,000 பேர் தற்கொலை செய்துள்ளனர்—ஒரு நாளுக்கு சராசரியாக 65 தற்கொலைகள்.நாட்டில் எங்கும் இத்தகைய மோசமான நிலை இல்லை. தமிழகம் 'இந்தியாவின் தற்கொலை தலைநகர்' என குறிப்பிடப்படுகிறது.



இருந்தும் அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை; உரையில் இது இடம்பெறவில்லை;
கல்வித் தரநிலைகள் தொடர்ந்து சரிவடைந்து வருகின்றன. கல்வி நிறுவனங்களில் பரவலான நிர்வாகக் குறைபாடுகள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கின்றன. 50% க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன.


தற்காலிக ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இளைஞர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கிறார்கள். இதுவும் உரையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது; பல ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில் பல ஆண்டுகளாக தேர்தல்கள் நடத்தப்படாததால் அவை செயலிழந்த நிலையில் உள்ளன; அரசு நியமித்த சிறப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.

மனவேதனை




கோடிக்கணக்கான மக்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகளில் இருந்து வஞ்சிக்கப்படுகின்றனர். இது அரசியலமைப்பின் எழுத்துக்கும் ஆவிக்கும் எதிரானது. கிராம பஞ்சாயத்துகள் மீண்டும் செயல்பட மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் உரையில் இது குறித்து ஒரு சொல்லும் இல்லை.


மாநிலத்தில் பல ஆயிரம் கோவில்களில் நிர்வாக வாரியங்கள் அமைக்கப்படாமல், அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. கோடிக்கணக்கான பக்தர்கள் கோவில்களின் தவறான நிர்வாகத்தால் மனவேதனையிலும் அதிருப்தியிலும் உள்ளனர்.

அலட்சியம்




பழமையான கோவில்களை மீட்டெடுத்து பாதுகாப்பதற்கான மதுரை உயர் நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள் 5 ஆண்டுகளாக அமல்படுத்தப்படவில்லை. பக்தர்களின் உணர்வுகள் அலட்சியமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன.


சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வெளிப்படும் மற்றும் மறைமுக செலவுகளால் கடும் அழுத்தத்தில் உள்ளன. வேலைவாய்ப்புக்கும் வளர்ச்சிக்கும் இவை மிக முக்கியமானவை. நாட்டில் 5.5 கோடிக்கு மேற்பட்ட MSMEகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சுமார் 40 லட்சம் மட்டுமே உள்ளது.

அவமதிப்பு




மிகுந்த வளர்ச்சி வாய்ப்புகள் இருந்தும், தமிழக தொழில் முனைவோர் பிற மாநிலங்களில் தொழில்களை தொடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த பிரச்னையும் உரையில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கீழ்மட்ட ஊழியர்களிடையே அனைத்து துறைகளிலும் பரவலான அதிருப்தி நிலவுகிறது.


அவர்கள் கலக்கம் மற்றும் ஏமாற்றத்தில் உள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து எந்த குறிப்பிடும் இல்லை; தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது; அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட அடிப்படை கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement