ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு; பழனிசாமி பதிலளிக்க உத்தரவு

சென்னை: ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு, முன்னாள் எம்.பி., - கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனு:

அ.தி.மு.க.,வில் போலி உறுப்பினர் சேர்க்கை நடத்தி, பணம் வசூலித்ததாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி துாண்டுதலில், கோவை மாவட்டம் சூலுார் வடக்கு ஒன்றிய செயலர் கந்தவேல், என் மீது கடந்த 2020ல் போலீசில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் பதிவான வழக்கில், கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டேன்; 19 நாட்களுக்குப் பின் ஜாமின் கிடைத்தது. இந்த வழக்கை ரத்து செய்து, 2024ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனவே, என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் புகார் அளித்து, அவதுாறு பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, பழனிசாமி, கந்தவேல் ஆகியோர், 1 கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும். எனக்கு எதிராக அவதுாறு கருத்து தெரிவிக்க, பழனிசாமிக்கும், கந்தவேலுவுக்கும் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.தனபால், இது தொடர்பாக அ.தி .மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கந்தவேல் ஆகியோர் பிப்., 13க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Advertisement