ராமநாதபுரத்தில் செயல்படாத அரசு அருங்காட்சியகம்: புதிய  கட்டடம் கட்ட 3 ஆண்டாக இடம்  தேடும் அவலம்


ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அரசு அருங்காட்சியகம் கட்டடம் சேதமடைந்துள்ளதால் நிரந்தரமாக பூட்டப்பட்டுள்ளது. 9 மாதங்களாக பார்வையாளர்களுக்கு அனுமதியில்லாத நிலையில் ரூ.5 கோடியில் புதிய அரசு அருங்காட்சியகம் கட்டுவதற்கு 2022ல் அறிவிக்கப்பட்டு திட்டம் கிடப்பில் உள்ளது.
ராமநாதபுரம் கேணிக்கரை ரோட்டில் ஜவான் பவன் கட்டடத்தில் முதல் தளத்தில் 2008 முதல் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டது. அருங்காட்சியகத்தில் 65 கற்சிலைகள், பழமையான மரத்திலான சிற்பங்கள், ஓவியங்கள், அரிய வகை நாணயங்கள், ஓலைச்சுவடிகள் என நுாற்றுக்கணக்கான பழங்கால பொருட்கள் உள்ளன.

இந்த கட்டடம் 1990ல் கட்டப்பட்டு போதிய பராமரிப்பில்லாமல் தற்போது கூரை சிமென்ட் பூச்சுகள் இடிந்து விழுகிறது. பல இடங்களில் கட்டடத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.பலத்த மழை பெய்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அருங்காட்சியகம் கடந்த 9 மாதங்களாக இங்கு செயல்படவில்லை.

அருங்காட்சியம் செயல்படுவது எப்போது என தெரியாமல் அங்கு வரும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 2022ல் புதிய அரசு அருங்காட்சியகம் ரூ.5 கோடியில் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்காக மண்டபத்தில் 5 ஏக்கரில் இடம் தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு ரூ.21 கோடியில் நாவாய் (மரக்களம்) அருங்காட்சியம் அமைக்கப்படும் என 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே அறிவித்துள்ள அரசு அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை இந்த ஆண்டாவது துவங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.-------

Advertisement