தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்; இபிஎஸ்-ஐ சந்தித்த பிறகு பியுஷ் கோயல் திட்டவட்டம்

10

நமது நிருபர்




சென்னை: மத்திய அமைச்சரும், தமிழக பாஜ., தேர்தல் பொறுப்பாளருமான பியுஸ் கோயல் மற்றும் பாஜ., தலைவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இல்லத்தில் காலை விருந்து அளிக்கப்பட்டது. பின்னர், ''தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்'' என நிருபர்களிடம் பியுஷ் கோயல் தெரிவித்தார்.


அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் பாமக தலைவர் அன்புமணி இணைந்தார். அன்றைய தினம் முதலே அரசியல் களம் விறுவிறுப்பானது. சென்னையை அடுத்த மதுராந்தகத்தில், பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நாளை நடக்கிறது. அதற்குள் கூட்டணியை இறுதி செய்து, கூட்டணி கட்சித் தலைவர்களை மேடையேற்ற, பா.ஜ., முயற்சித்து வருகிறது.

Tamil News
Tamil News
நேற்று சென்னை வந்த மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் இணைந்தார். கூட்டணி அறிவிப்புக்குப் பின், பியுஸ் கோயல் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்களுடன், 30 நிமிடங்களுக்கு மேலாக தினகரன் ஆலோசனை நடத்தினார்.



இந்நிலையில் இன்று (ஜனவரி 22) சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ சந்திக்க அவரது இல்லத்திற்கு பியுஷ் கோயல் சென்றார். பியுஸ் கோயல் மற்றும் பாஜ., தலைவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இல்லத்தில் காலை விருந்து அளிக்கப்பட்டது.


பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் விருந்தில் கலந்து கொண்டனர். அதிமுக-பாஜ இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

நீண்ட கால நண்பர்




பின்னர் நிருபர்களிடம் பியுஷ் கோயல் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் எனது நீண்ட கால நண்பர். அவரது வீட்டில் நான் காலை உணவு அருந்தினேன். பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் இபிஎஸ்க்கு வாழ்த்து தெரிவித்தனர். ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை மொத்தமாக வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்.


திமுக ஆட்சியில் ஊழலை தவிர வேறு ஏதும் நடக்கவில்லை என அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொண்டனர். தமிழக மக்களின் நலனுக்காக திமுக அரசு ஏதும் செய்யவில்லை. நீதிமன்ற கண்டனத்திற்கு ஆளான துணை முதல்வர் உதயநிதியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். துணை முதல்வர் உதயநிதி பிளவுவாத அரசியல் செய்கிறார். இந்திய தேசத்திற்கு எதிரான கருத்தை உதயநிதி கூறி வருகிறார். இவ்வாறு பியுஷ் கோயல் கூறினார்.

மகிழ்ச்சி!



அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நிருபர்களிடம் கூறியதாவது: இன்றைய தினம் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் எங்களது இல்லத்திற்கு வருகை தந்தது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. அவருடன் பாஜவை சேர்ந்த மத்திய அமைச்சர் முருகன், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வருகை தந்து உள்ளனர். நாளை நடைபெறும் பொதுக்கூட்டம் தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

வெற்றிக்கு அச்சாணி



5 லட்சம் பேர் அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன். இந்த பொதுக்கூட்டம், எங்களுடைய கூட்டணியின் வெற்றிக்கு அச்சாணியாக அமையும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த அரசு எல்லா துறையிலும் தோல்வியை கண்டுவிட்டது. எல்லா துறையிலும் ஊழல் நிறைந்து இருக்கின்றன.


வலுமையான கூட்டணி



4 லட்சம் கோடி ரூபாய் பல துறைகளில் ஊழல் நடந்துள்ளது என அறிக்கையை கவர்னரிடம் வழங்கி இருக்கிறோம். எங்களுடைய கூட்டணி வலிமையான கூட்டணி. இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பிரதமர் மோடி, 'மேக் இன் இந்தியா' என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி, இந்தியாவை எதிர்காலத்தில் வல்லரசு நாடாக உருவாக்குவதற்கு அனைத்து முயற்சியையும் எடுத்து கொண்டு இருக்கிறார்.

வளர்ச்சி



அதிமுக- தேஜ கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி நிலவும், அப்போது தமிழகம் மிகப்பெரிய ஏற்றத்தை பெறும். இதுநாள் வரை இல்லாத வளர்ச்சியை இந்த தேர்தல் மூலமாக வெற்றி பெற்று மக்களுக்கு வழங்குவோம். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.



@block_G@

மிகுந்த மகிழ்ச்சி

இது குறித்து மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான, பழனிசாமியை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. தமிழகத்தின் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடினோம். ஊழல் மலிந்த நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, தமிழ்ப் பெருமை, பண்பாடு மற்றும் பெண்கள் நலனுக்கு எதிரான கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திமுக அரசு தமிழகத்தில் தோல்வியடைந்ததைப் பற்றியும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். தமிழகத்திற்கு முன்னேற்றத்தைக் கொண்டு வரும் வெளிப்படையான, மக்கள் மையமான ஆட்சியை வழங்குவதற்கான தேஜ கூட்டணியின் உறுதியான அர்ப்பணிப்பை நாங்கள் கூட்டாக மீண்டும் உறுதிப்படுத்தினோம். இவ்வாறு பியுஷ் கோயல் கூறியுள்ளார்.block_G

Advertisement