விசில் சின்னம் இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு: விஜய் மகிழ்ச்சி

32


சென்னை: ''வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு,'' என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.


தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என தேர்தல் கமிஷன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக மக்களின் முதன்மை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் சக்தியாகத் திகழும் தவெகவின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.

தேர்தல் ஆணையத்திடம் நம் கட்சிக்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில். தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை மகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்கு கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடு என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.


நமது சின்னம் விசில். நல்லவர்கள் சின்னம் விசில். நாடு காப்பவர்கள் சின்னம் விசில். ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில். ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச் சின்னம் விசில். வருகிற சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.

Advertisement