ஆயுதங்களை தூக்கியெறிந்து விட்டு... நக்சல்களுக்கு அமித் ஷா இறுதி எச்சரிக்கை

புதுடில்லி: பயங்கரவாதம் மற்றும் ஆயுதங்களைக் கையில் ஏந்தும் சித்தாந்தத்தைக் கைவிட்டு விட்டு, நாட்டின் வளர்ச்சி மீது நம்பிக்கை வைக்கும் மக்களோடு மக்களாக இணையுமாறு, நக்சலைட்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக, ஜார்க்கண்ட்,சத்தீஸ்கர், பீகார் உள்ளிட்ட நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அவர்களை ஒடுக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அந்த வகையில், நேற்று ஜார்க்கண்டின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள சரன்டா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் இயக்கத்தின் முக்கிய தலைவர் அனல்டா உள்பட 15 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அனல்டாவை பிடித்து கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று அம்மாநில போலீஸார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மேற்கு சிங்பூம் பகுதியில், நக்சலைட்டுகள் இல்லாத பகுதியாக உருவாக்கும் சிஆர்பிஎப் மற்றும் ஜார்க்கண்ட் போலீசாரின் தேடுதல் வேட்டைக்கு ஒரு முக்கிய வெற்றி கிடைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; பல ஆண்டுகளாக பயங்கரவாதத்திற்கு பெயர்போன நக்சலைட்டுகளை வரும் 2026 மார்ச் 31ம் தேதிக்குள் முழுமையாக வேரறுக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வன்முறை, பயங்கரவாதம் மற்றும் ஆயுதங்களைக் கையில் ஏந்தும் சித்தாந்தத்தைக் கைவிட்டு விட்டு, நாட்டின் வளர்ச்சி மற்றும் நம்பிக்கை கொண்ட மக்களுடன் இணையுமாறு எஞ்சியிருக்கும் நக்சலைட்டுகளுக்கு நான் மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுக்கிறேன்,இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement