கூட்டணி குறித்து ஒருவாரத்திற்குள் முடிவு; கிருஷ்ணசாமி அறிவிப்பு

1

கோவை: கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாட்டை அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் தெளிவுபடுத்துவோம் என அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள இல்லத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது; ஒரு சில கருத்துகளை தெளிவுபடுத்தவே இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளேன். மதுரை மாநாட்டில் சட்டசபை தேர்தலுக்கான வியூகத்தை அமைத்துள்ளோம். வழக்கத்துக்கு மாறாக தேர்தல் அறிவிக்கும் முன்பாகவே தேர்தல் பரபரப்பு தொற்றி இருக்கின்றது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை துவங்கி இருக்கின்றனர். ஊடகங்களில் புதிய தமிழகம் கட்சி நிலைப்பாடு குறித்து செய்தி வந்தபடி இருக்கின்றது.

கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. யாருடன் கூட்டணி என்பது குறித்து கலந்து பேசி வருகின்றோம். வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கொள்கை ரீதியான ஆட்சி அமைக்கும் வகையில் திட்டங்களை வகுத்து வருகின்றோம். புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாட்டை அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் தெளிவுபடுத்துவோம்.

கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் கூட்டணிக்கு என சில வழி முறைகள் வைத்திருத்தனர். ஆனால் இப்போது அது போன்று இல்லை. புதிய தமிழகத்தை அதிகாரப்பூர்வமான முறையில் எந்த கட்சிகளும் அணுகவில்லை. வழக்கமான அணுகுமுறைகள் இப்போது இல்லை. கூட்டணியில் பங்கு என்ற நிலைப்பாடுகளுக்குள் இப்போது நாங்கள் போகவில்லை. திறந்த மனப்பான்மையுடன் இருக்கின்றோம்.

புதிய தமிழகத்தின் மதுரை மாநாட்டின் 13வது தீர்மானத்தில் இருந்து நாங்கள் விலக வில்லை. இன்னும் கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை. மதுராந்தகத்தில் இன்று நடக்கும் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்பதாக தகவல் வந்தது. 2 நாட்களாக வரும் அந்த செய்திகள் உண்மை இல்லை. கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. நாங்கள் எந்த விதமான குழப்பத்திலும் இல்லை.

தமிழகத்தில் 100 தொகுதிகளில் நாங்கள் வலுவாக இருக்கின்றோம். புதிய தமிழகம் கட்சி இல்லாமல், தென் தமிழகத்தில் யாரும் வெற்றி பெற முடியாது. யாரும் அழைக்கவில்லை என்பதை பற்றி கவலையில்லை. புதிய தமிழகம் கட்சி ஒரு சில பகுதிகளில் மட்டும் போட்டியிடும் என்பதால், தேர்தலுக்கு 5 நாட்கள் முன்புதான் சின்னம் கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement