திட்டக்குடியில் ரூ. 23.95 கோடியில் துணை மின் நிலையம் பணிகள் துவக்கம்

திட்டக்குடி: திட்டக்குடியில் 23.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய துணைமின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

திட்டக்குடி நகராட்சி, தருமகுடிக்காட்டில் உள்ள 33 கே.வி., திறனுடைய துணைமின் நிலையம் மூலம் திட்டக்குடி நகரம் மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது.

குறைந்த மின் அழுத்தத்தால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு, கிராம மக்கள் கடும் அவதியடைந்தனர். துணைமின் நிலையத்தை 110 கே.வி., திறன் கொண்ட துணைமின் நிலையமாக தரம் உயர்த்த கோரிக்கை எழுந்தது.

அதையேற்று கடந்த, 3 மாதங்களுக்கு முன் திட்டக்குடி துணைமின் நிலையம், 110 கே.வி., திறன்கொண்ட துணைமின் நிலையமாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக, ரூ. 23 கோடியே 95 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

புதிய துணை மின் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, பணியை துவக்கி வைத்து, விரைந்து முடிக்கவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில், தலைமை பொறியாளர் சதாசிவம், மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) பாலாஜி, உதவி செயற்பொறியாளர் கரிகாலசோழன், உதவி பொறியாளர்கள் திட்டக்குடி சக்திவேல், பெண்ணாடம் வெங்கடேசன், உதவி மின் பொறியாளர் சண்முகசெழியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, துணைமின் நிலையம் தரம் உயர்த்தப்பட்டால் சுற்று வட்டார கிராம பகுதிகளில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் சீரான மின்சாரம் பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement