முடிவுக்கு வந்தது நீண்ட கால போராட்டம்: புலம் பெயர்ந்த 63 பேருக்கு மறுவாழ்வு திட்டத்திற்கு உ.பி.,அமைச்சரவை ஒப்புதல்

1

லக்னோ:உத்தரப் பிரதேச அமைச்சரவை, 1970-களில் வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்த 63 ஹிந்து குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்த 63 ஹிந்து குடும்பத்தை சேர்ந்தவர்கள் உ.பி., மாநிலம் மீரட்டில் இருந்த ஒரு நூல் மில்லில் பணிபுரிந்து வந்தனர், 1984-ல் மில் மூடப்பட்ட பிறகு வாழ்வாதாரமின்றி தவித்தன. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலான திட்டங்களுக்கு உ.பி. மாநில அரசு ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது இவர்களது நீண்டகாலப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
உ.பி., அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள மறுவாழ்வுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் 200 சதுர மீட்டர் குடியிருப்பு மனை ஒதுக்கப்படும்.
கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள ரசூலாபாத் தாலுக்காவில் இந்த குடும்பங்கள் குடியேற்றப்படுகின்றன. முக்ய மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1.20 லட்சம் மானியம் வழங்கப்படும்.


குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் 30 ஆண்டுகளுக்கு ரூ.1 என்ற பெயரளவு குத்தகை வாடகையில் வழங்கப்படும். நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் கொண்ட மாதிரி கிராமங்களாக இவை மேம்படுத்தப்படும்.
இவ்வகையான மறுவாழ்வுத் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement