வேன் - லாரி மோதி இருவர் பலி

தர்மபுரி: ராணிப்பேட்டை மாவட்டம், பழைய மாங்காடை சேர்ந்தவர் சாவித்திரி, 53; இவரது குடும்பத்தினர், உறவினர்கள் என, 24 பேர், நேற்று முன்தினம் இரவு, சேலம் கொண்டலாம்பட்டி அருகே, குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட, வேனில் புறப்பட்டனர். குமரேசன், 34, வேனை ஓட்டினார்.

நேற்று அதிகாலை, 4:10 மணிக்கு, தர்மபுரி, தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் எதிரே, சாலையோரத்தில் வேனை நிறுத்தினர். அப்போது, பெங்களூருவில் இருந்து காட்டன் துணிகள் ஏற்றி வந்த லாரி, வேனின் பின்னால் மோதி, சாலையில் கவிழ்ந்தது.

இதில், வேனில் இருந்த சாவித்திரி, டிரைவர் குமரேசன் ஆகியோர், சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த தருண், 15, கண்ணு, 42, மாதிரை, 39, ஆகிய மூவர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதியமான்கோட்டை போலீசார், விசாரிக்கின்றனர்.

Advertisement