'போலீஸ் ஸ்டேஷன்களில் 'சிசிடிவி' பொருத்தினால் போதுமா': உச்ச நீதிமன்றம் கேள்வி

1

போலீஸ் ஸ்டேஷன்களில், 'சிசிடிவி' கண் காணிப்பு கேமரா பொருத்தினால் மட்டும் போதுமா என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தகவல்களை முறையாக சேகரித்து பாதுகாக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளது.


நாடு முழுதும் போலீஸ் ஸ்டேஷன்களில், 'லாக் - அப்' மரணங்கள் அதிகரித்து வந்த நிலையில் இதற்கு மிக முக்கியமான காரணம் போலீஸ் ஸ்டேஷன்களில், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் இருப்பதுதான் என்ற புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.


இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது. போலீஸ் ஸ்டேஷன்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது தொடர்பான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.


இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிசிடிவி விவகாரத்தில் எந்தெந்த மாநிலங்கள் இதுவரை பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதிலளித்த நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தவே, ''சிசிடிவி விவகாரத்தில் இதுவரை மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. குஜராத், சத்தீஸ்கர் மாநிலங்கள் தங்களுடைய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை அதேபோல தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்திலும் முழுமையான விபரங்கள் இல்லை,'' என கூறினார்.


இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:




போலீஸ் ஸ்டேஷன்களில், சிசிடிவி பொருத்தும் விவகாரத்தில் ஒருங்கிணைந்த விதிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக பிப்., 21ல், அனைத்து மாநில தலைமை செயலர்கள் கூட்டத்தை, மூத்த வழக்கறிஞர் தவே கூட்ட வேண்டும். வீடியோ கான்பரஸ் வாயிலாக ஆலோசனை நடத்தி, மாநிலங்கள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில், பிரமாண பத்திரத்தை அவர் தாக்கல் செய்ய வேண்டும்.


இந்த விவகாரத்தில், மத்திய - மாநில அரசுகள் இடையே முழுமையான ஒத்துழைப்பை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. தேவையான நிதியை, அரசுகள் உடனடியாக விடுவிக்க வேண்டும்.


நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதற்காக, வெறுமனே சிசிடிவி கேமரா பொருத்தினால் மட்டும் போதாது. நாள்வாரியாக தரவுகள் முறையாக சேகரித்து வைக்கப்பட வேண்டும்; அது மிகவும் முக்கியமானது. சேகரிக்கப்பட்ட தரவுகள் அனைத்தும் ஒருங்கிணைந்த மையப்படுத்தப்பட்ட தளத்தில் வைத்திருப்பது மிக மிக அவசியம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


-- டில்லி சிறப்பு நிருபர் -

Advertisement