ஜனநாயகன் படம் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தணிக்கை வாரியம் கேவியட் மனு

15


சென்னை: விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்தால், தங்களது கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.


விஜய் நடித்த, ஜனநாயகன் படம், பொங்கலை முன்னிட்டு, ஜன., 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என, படக்குழு அறிவித்தது. படத்துக்கு சி.பி.எப்.சி., எனும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. அதனால், தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்., புரொடக்சன்ஸ் எல்.எல்.பி., என்ற தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி பி.டி.ஆஷா, படத்துக்கு உடனே தணிக்கை சான்று வழங்க உத்தரவிட்டார்.

அந்த உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை, விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் உடனே தணிக்கை சான்று வழங்கும்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.


இந்நிலையில், தணிக்கை வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகன் படம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில், தங்களின் கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement