அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு மருந்து வழங்குவதில் குளறுபடி

தேவகோட்டை: தேவகோட்டை அரசு மருத்துவமனை சுமார் 50 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது.

தேவகோட்டை நகரம் மட்டுமின்றி சுமார் 200 கிராமங்களுக்கு இந்த மருத்துவ மனை. ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் அடிக்கடி விபத்து காரணமாக பாதிக்கப்பட்டோர் அதிகளவில் வரும் சூழலும் உள்ளது. இதில் வழக்கமான ஆண்கள் பெண்கள் பிரிவு படுக்கை வசதி உட்பட மகப்பேறு, குழந்தைகள் நலப் பிரிவு என சுமார் 85 படுக்கைகள் உள்ளன. பெரும்பாலும் படுக்கைகள் நிரம்பியே இருக்கிறது.

பிரசவம் முடிந்து தாயும் சேயுமாக அறைகளில் உட்பட சுமார் 100 பேர் உள்நோயாளிகளாக உள்ளனர். இது போக தினமும் 200க்கும் குறையாமல் புற நோயாளிகள், நிரந்தர அட்டையுள்ள சர்க்கரை நோயாளிகள் வந்து மருந்துகள் வாங்கி செல்கின்றனர். விஷக்கடிகளுக்கு இந்த மருத்துவ மனையில் சிறப்பான ஊசி மருந்துகள், மாத்திரைகள் இருப்பதால் இன்றைய நாய் தொல்லையால் நாய்க்கடி பாதிக்கப்பட்டோர் தினமும் வருகின்றனர்.

அரசும் தேவைக்கு உடனுக்குடன் மருந்துகள் சப்ளை செய்கின்றனர். ஆனால் நோயாளிகளிடம் குமுறல்கள் தொடர்ந்து நிலவி வருகிறது.

மருந்து வழங்குவதில் குளறுபடி டெங்கு, சிக்குன் குனியா என்று பாதிப்பு பல இடங்களில் இருக்கும் சூழ்நிலையில் மருத்துவ மனையை சுற்றி கொசுக்கடி ஒரு புறம் இருந்தாலும் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்குவதில் குறைபாடு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் நாளைக்கு மூன்று வேளை மருந்து வழங்க எழுதி கொடுக்கின்றனர்.

ஆனால் இரண்டு வேளை மட்டுமே மாத்திரைகள் வழங்குகின்றனர். நர்சுகளும் 3 வேளைக்கு மாத்திரை வழங்காமல், இரு வேளைக்கு மட்டுமே வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.

இதே போல் ஊசி போடுவதிலும் மருந்துகள் குறைவாக இருப்பதாக கூறு கிறார்கள். அதே சமயம் மருந்து காப்பகத்தில் குறிப்பிட்ட மருந்துகள் வழங்குவதாகவும், இருப்பு சரியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நோயாளிகள், நிலைய மருத்துவ அலுவலரிடம் புகார் செய்தும், நடவடிக்கை இல்லை என தெரிவிக்கின்றனர்.

இது குறித்து எழுந்த புகாரின் பேரில் நர்சுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தெரிவித்தனர். அனைவருக்கும் சரியாக வழங்குவதாக நர்சுகள் தெரிவிப்பதாகவும், இது குறித்து தொடர்ந்து கண்காணிப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement