தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.7,611 கோடி ஒதுக்கீடு; பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி

1

சென்னை: 2026-2027ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.7,611 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.


அவரது அறிக்கை: பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் திறமையான வழிகாட்டுதலின் கீழும், தமிழகத்திற்கு பட்ஜெட்டில் ரயில்வே திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.879 கோடியிலிருந்து ரூ.7,611 கோடியாக உயர்ந்துள்ளது. இது 9 மடங்கு அதிகமாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க உயர்வாகும்.


ரூ.35,701 கோடி மதிப்புள்ள ரயில்வே பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது நமது மாநிலம் முழுவதும் தண்டவாளங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் மாற்றி அமைக்கப்படுகின்றன.


அம்ரித் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் ரூ.3,147 கோடி செலவில் 77 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. சிதம்பரம், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை மற்றும் பொள்ளாச்சி உட்பட 18 முக்கிய ரயில் நிலையங்களில் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.


9 வந்தே பாரத் மற்றும் 9 அம்ரித் பாரத் சேவைகள், 2014 முதல் 1,350 கி.மீ புதிய ரயில் பாதைகள், 97% மின்மயமாக்கல், 769 மேம்பாலங்கள் மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சென்னை-ஹைதராபாத் மற்றும் சென்னை-பெங்களூரு அதிவேக ரயில் வழித்தடங்கள் ஆகியவை தமிழகத்திற்கான ரயில் சேவை இணைப்புகளை அதிகரிக்கின்றன.


இந்த முன்னோடியில்லாத ரயில்வே வளர்ச்சிப் பணிகளுக்காக, தமிழக மக்கள் சார்பாக பிரதமருக்கும் ரயில்வே அமைச்சருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement