சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்; கேரள சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில் தொடர்புடைய தேவஸ்வம்போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் பதவி விலக வேண்டும் என்று கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

கடந்த 2019ம் ஆண்டு கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்த போது, துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, துவார பாலகர் சிலைகளின் தங்க கவசத்தில் இருந்து 4 கிலோ தங்கம் மாயமானது. அதேபோல, கருவறை கதவுகளில் இருந்தும் தங்கம் திருடப்பட்டது.

இது குறித்து உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணை குழு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு முன்னாள் அதிகாரிகள் உள்பட 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் ஜெயராம் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம் கேரள சட்டசபையிலும் எதிரொலித்தது. இந்த விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். தேவஸ்வம்போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் பதவி விலக வேண்டும் என்று பதாகைகளுடன் கோஷமிட்டனர். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, அவையில் இருந்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சியினர், சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் முதல்வர் அலுவலகம் தலையிடுவதாக குற்றம்சாட்டினர்.

Advertisement