வாழ்க்கையை பறித்த வீடியோ கேம்; 9வது மாடியில் இருந்து சகோதரிகள் 3 பேர் குதித்து தற்கொலை

1

காசியாபாத்: உத்தரபிரதேசத்தில் வீடியோ கேம் விளையாட பெற்றோர் தடை போட்டதால் ஏற்பட்ட விரக்தியில், சகோதரிகள் 3 பேர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு பக்தி,12, பிராச்சி,14, விஷிகா,16, ஆகிய 3 பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்கள் மூவரும் கொரியன் வீடியோ கேமுக்கு அடிமையாகி இருந்தனர். குழந்தைகள் வீடியோ கேமில் மூழ்கி கிடந்ததால், இனி அதனை விளையாடக் கூடாது என்று அவர்களின் பெற்றோர் தடை போட்டனர். இதனால், சிறுமிகள் மூவரும் மனமுடைந்து அதிருப்தியில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று நள்ளிரவு 2.15 மணியளவில் தங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் 9வது மாடியில் இருந்து சிறுமிகள் 3 பேரும் குதித்துள்ளனர். சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த காவலாளி அதிர்ந்து போனார். பின்னர், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் சிறுமிகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 3 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

சிறுமிகள் தற்கொலை செய்வதற்கு முன்பாக கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளனர். அதில், "இந்தக் கடிதத்தில் இருப்பதை முழுவதுமாக படியுங்கள். அப்பா எங்களை மன்னித்து விடுங்கள். கொரியாவை விட்டு எங்களால் வெளியே வர முடியாது. கொரியா தான் எங்களின் வாழ்க்கை. அது இல்லாமல் எங்களால் இருக்க முடியாது. எங்களின் வாழ்க்கையை நாங்கள் முடித்துக் கொள்கிறோம்," எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சிறுமிகளின் அறையில் நடத்திய ஆய்வின் போது, அங்குள்ள சுவரில் மிகவும் தனிமையில் இருப்பதாக உயிரிழந்த சிறுமிகளில் ஒருவர் எழுதியுள்ளார். சிறுமிகளின் தற்கொலைக்கு வீடியோ கேம் தூண்டுதலாக அமைந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement