வரலாற்றில் முதல் முறை; சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய மாநில முதல்வர் மம்தா!

26

புதுடில்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிரான வழக்கில் இன்று (பிப்ரவரி 04) முதல்வர் மம்தா பானர்ஜி ஆஜராகி வாதாடினார். பதவியில் இருக்கும் ஒரு மாநில முதல்வர், சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதிட்டது இதுவே முதல் முறை.




நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. இறந்து போன வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள், வெவ்வேறு இடங்களில் பட்டியலில் பெயர் இருப்பவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் வங்கதேசத்தவர் ஊடுருவல் அதிகம் இருப்பதால், அங்கு தேர்தல் கமிஷன் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் நோக்கத்துடன் தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கைக்கு, திரிணமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. எஸ்.ஐ.ஆர்., பணியை எதிர்த்து, மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.


நேற்று முன்தினம் டில்லி சென்ற மம்தா பானர்ஜி தலைமை தேர்தல் கமிஷனர் உள்பட மூன்று தேர்தல் கமிஷனர்களை சந்தித்து பேசினார். இன்று (பிப் 04) வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிர பணிக்கு எதிராக மம்தா பானர்ஜி தாக்கல் செய்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி, விபுல் பான்சோலி அமர்வு விசாரித்தது.


இந்த வழக்கில் தானே நேரில் ஆஜராகி வாதிட மம்தா பானர்ஜி அனுமதி கேட்டு இருந்தார். மனுதாரர் அவர் தான் என்பதால் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து மம்தா பானர்ஜி நேரில் ஆஜராகி வாதிட்டார். தேர்தல் கமிஷனுக்கு எதிராக தன் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.


மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள யோகேஷ் சந்திர சவுத்ரி சட்ட கல்லூரியில் சட்டப்படிப்பு பயின்றவர். வழக்கறிஞர் பயிற்சியையும் முடித்துள்ளார். அதன் பிறகு தான் அவர் அரசியலுக்குள் நுழைந்தார். சுப்ரீம் கோர்ட்டின் நடைமுறைகளை நன்கு அறிந்து வைத்த காரணத்தினால் மம்தா பானர்ஜி இன்று தன் தரப்பு வாதங்களை முன் வைத்து வாதிட்டார்.


மம்தா வாதம் பின்வருமாறு:



* என்னுடைய கட்சிக்காக எஸ்ஐஆரை எதிர்த்து போராடவில்லை.

* வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஆதார் அட்டையை ஏற்றுக்கொள்ள தேர்தல் கமிஷன் மறுக்கிறது.

* வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கவே எஸ்ஐஆர் நடத்தப்படுகிறது; பெயர் சேர்க்க நடத்தப்படவில்லை.

* தேர்தல் கமிஷனுக்கு 6 முறை கடிதங்கள் எழுதி இருக்கிறேன். இதுவரை எந்த பதிலும் வரவில்லை; மேற்கு வங்கத்தை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்?

இவ்வாறு மம்தா பானர்ஜி வாதிட்டார்.


ஒத்திவைப்பு




இந்த வழக்கில் 2 நாட்களில் தேர்தல் கமிஷன் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

வரலாற்றில் முறை

சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் என்று பலப்பல விஐபிக்கள் வாதிட்டுள்ளனர். ஆனால் பதவியில் இருக்கும் ஒரு மாநில முதல்வர், தன் வழக்கு விசாரணைக்காக தானே நேரில் ஆஜராகி வாதிட்டது இதுவே முதல் முறை. அந்த வகையில் இன்று மம்தா பானர்ஜி புதிய வரலாறு படைத்தார்.

Advertisement