நேபாளம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய மசோதா வாபஸ்; அரசு அறிவிப்பு
காத்மாண்டு: நேபாளத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய, ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்த சமூக ஊடக மசோதாவை திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்துள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடகங்களின் பயன்பாடு மற்றும் கண்காணிப்பு தொடர்பான விதிமுறைகளை கொண்டு வரும் மசோதாவை முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.
அதற்கு முன்னதாகவே அங்கு 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப், யுடியூப், எக்ஸ்' உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதித்ததால் அரசுக்கு எதிராக இளைஞர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கே.பி. சர்மா ஒலி அரசு கலைக்கப்பட்டு, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
தற்போது, சர்ச்சைக்குரிய அந்த மசோதாவை பார்லிமென்டில் இருந்து திரும்பப் பெறுவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.