கல்வித்துறை அதிரடி: கர்நாடகாவில் 'மொபைல் போன், டிவி'யை இரவு 7:00 - 9:00 மணி வரை நிறுத்த அலாரம்

பெங்களூரு: கர்நாடகாவில், 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க, இரவு 7:00 முதல் 9:00 மணி வரை வீடுகளில் மொபைல் போன்கள், 'டிவி'யை நிறுத்த அலாரம் அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில், 10ம் வகுப்பு தேர்வில், ஆண்டுக்காண்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், கலபுரகி மாவட்டம், ஆலந்த் தாலுகாவின் வட்டார கல்வி அதிகாரி ரங்கசுவாமி ஷெட்டி, கடந்த டிசம்பரில், கின்னிசுல்தான் கிராமத்திற்கு சென்றார்.

அங்கு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும், 20 மாணவர்களின் பெற்றோரை சந்தித்தார். 'இம்முறை உங்கள் பிள்ளைகள் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டுமானால், தினமும் இரவு 7:00 முதல் 9:00 மணி வரை பாட புத்தகங்களை படிக்க வைக்க வேண்டும். இந்நேரத்தில் அவர்கள் எக்காரணம் கொண்டும், 'டிவி'யோ, மொபைல் போனோ பார்க்கக் கூடாது' என, அறிவுறுத்தினார்.

அன்று முதல் தினமும் இரவு நேரத்தில் அக்கிராமத்திற்கு சென்று, மாணவர்களுக்கு பாடத்தில் சந்தேகம் இருந்தால் விளக்கம் அளித்தார். இதன் பலனாக, பாடத்தின் மீது அவர்களுக்கு நாட்டம் அதிகரித்தது.

இந்நிலையில், நடப்பாண்டு 10ம் வகுப்பு தேர்வு, மார்ச் 18ல் துவங்குகிறது. இம்முறை குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண், 100க்கு 35ல் இருந்து 33 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும், கலபுரகியில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தை போன்று, மாநிலம் முழுதும் செயல்படுத்த கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.

இதன்படி, ஒவ்வொரு அதிகாரியும், தங்கள் எல்லைக்கு உட்பட்ட வீடுகளில் உள்ள பெற்றோரிடம், 'இரவு 7:00 முதல் 9:00 மணி வரை மொ பைல் போன்கள், 'டிவி'க்களை கட்டாயமாக அணைக்க வேண்டும். இந்த இரண்டு மணி நேரம், மாணவர்களுக்கு மட்டுமின்றி, பெற் றோருக்கும் பொருந்தும்.

பெற்றோர், தங்கள் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தால், குழந்தைகள் படிப்பதில் ஆர்வம் இழந்து விடுவர். எனவே, குடும்பத்தினர் அனைவரும் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.

இதை ஒவ்வொரு கிராமத்திலும், 'தண்டோரா' அடிப்பதுடன், நகர பகுதியில் இரவு 7:00 மணிக்கு அலாரம் ஒலி எழுப்ப வேண்டும்.

இதன் மூலம் படிக்கும் நேரம் துவங்கி விட்டது என்பது பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படும். மீண்டும் இரவு 9:00 மணிக்கு அலாரம் ஒலி எழுப்பும் போது, படிக்கும் நேரம் முடிந்ததாக கருதப்படும்.

மாநில கல்வி துறையின் இத்திட்டம், பெற்றோரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement