டாக்டர்களை அவமதிக்கும் திமுக; வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அண்ணாமலை காட்டம்

9

சென்னை: திமுக அரசு, தொடர்ந்து டாக்டர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் ஆரோக்கியம் இதில் அடங்கியிருக்கிறது என்பதைக் கூட, முதல்வர் ஸ்டாலின் உணரவில்லை என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


@1brஇது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலினின் தந்தை, மறைந்த கருணாநிதி கொண்டு வந்த அரசாணை எண் 354 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி, தமிழக அரசு டாக்டர்கள் நான்கரை ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, டாக்டர்களை சந்தித்து, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் டாக்டர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், தற்போது அரசு டாக்டர்களின் குரலை திட்டமிட்டு மவுனப்படுத்தி வருகிறார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய அரசு டாக்டர்கள், இன்று தங்கள் ஊதியத்துக்காக போராட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவையும், தேசிய மருத்துவ அமைப்பின் அறிவுறுத்தலையும் கூட, திமுக அரசு ஒரு பொருட்டாக கருதவில்லை.

அரசு டாக்டர்களுக்கு, 12 ஆண்டுகளில் வழங்கப்பட வேண்டிய ஊதியப்பட்டை நான்கும் மறுக்கப்படுகிறது. DACP ஊதியமும் மறுக்கப்படுகிறது. பதிலாக, திமுக அரசு டாக்டர்களை கைது செய்வது, பணியிட மாற்றம் செய்வது என, தண்டித்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்றில் உயிரிழந்த அரசு டாக்டர் விவேகானந்தன் குடும்பத்திற்கு இன்னும் அரசு வேலை வழங்கவில்லை. போராட்ட களத்தில், அரசு பஸ் மோதி உயிரிழந்த பச்சிளம் குழந்தை சிறப்பு டாக்டர் மணிக்குமார் உடலுக்கு மலர் வளையம் வைத்ததோடு சரி. சுகாதாரத்துறை அமைச்சரின் அரசியல் நாடகமும் முடிந்து விட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதமே, தமிழக பாஜ சார்பில், அரசு டாக்டர்களுக்காக
குரல் கொடுத்தோம். மக்கள் நல்வாழ்வும், டாக்டர்கள் நலமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஆனால், திமுக அரசு, தொடர்ந்து டாக்டர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் ஆரோக்கியம் இதில் அடங்கியிருக்கிறது என்பதைக் கூட, முதல்வர் ஸ்டாலின் உணரவில்லை.

உடனடியாக, அரசாணை எண் 354 அமல்படுத்தப்பட வேண்டும். டாக்டர் விவேகானந்தன் மனைவிக்கு, அரசு வேலை வழங்கப்பட வேண்டும். டாக்டர் மணிக்குமார் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அரசு டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும், உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement