நற்பெயரை கெடுக்க சதி!

'இந்த பொய் பிரசாரத்தை எப்படி முறியடிப்பது...' என்ற குழப்பத்தில் இருக்கிறார், மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சரும், பிரபல மலையாள நடிகருமான சுரேஷ் கோபி.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆதிக்கம் மிகுந்த கேரளாவில், 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், திருச்சூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றி, கேரள அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. வரும் ஏப்ரலில், கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இதில் பா.ஜ.,வுக்கு கணிசமான வெற்றியை பெற்றுத் தர வேண்டிய பொறுப்பை, சுரேஷ் கோபியிடம் அளித்துள்ளது, அந்த கட்சி மேலிடம்.

ஆனால், சுரேஷ் கோபியின் அரசியல் எதிரிகளோ, அவருக்கு எதிரான வேலைகளை இப்போதே துவங்கி விட்டனர். 'கடந்த லோக்சபா தேர்தலின் போது, திருச்சூரில், மத்திய அரசின், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக சுரேஷ் கோபி வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதி என்னாச்சு?' என, கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள சுரேஷ் கோபி, 'திருச்சூரில் எய்ம்ஸ் அமைப்பதாக நான் கூறவே இல்லை. மக்களிடம் எனக்குள்ள நற்பெயரை கெடுக்க, அரசியல் எதிரிகள் சதி செய்கின்றனர்...' என, புலம்புகிறார்.

Advertisement