மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

கீழக்கரை: கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் 34வது பட்டமளிப்பு விழா ஆடிட்டோரியத்தில் நடந்தது. முதல்வர் எஸ்.சுமையா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். கல்லுாரியின் சிறப்பம்சங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்த மாணவிகளின் அனுபவங்கள் பற்றி விளக்கி கூறப்பட்டது.

சென்னை கிரசென்ட் மகளிர் பள்ளி நிர்வாக பொறுப்பாளர் ஷரீபா அஜீஸ் முன்னிலை வகித்து பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கூறுகையில், உயர்கல்வி கற்று பல்வேறு துறைகளில் மிகப்பெரிய பதவிகளை பெண்கள் வகிக்கின்றனர். கல்வியால் மட்டுமே சாதனைகளை படைக்க முடியும்.

நாட்டின் முதுகெலும்பாக பெண் கல்வி உள்ளது. நாட்டிற்கும் நம்மால் இயன்ற அனுபவ அறிவின் மூலம் சேவைகளை செய்ய வேண்டும் எனப் பேசினார். 2024ம் ஆண்டில் பயின்ற இளநிலை பிரிவு, முதுநிலைப் பிரிவு, ஆய்வியல் நிறைஞர் பிரிவு என மொத்தம் 492 மாணவிகளுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கல்லுாரியின் தேர்வு நெறியாளர் முத்துமாரீஸ்வரி, துணை முதல்வர்கள், மாணவியர் செயல்பாட்டு முதன்மையர், பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் பொது மேலாளர் சேக் தாவூத்கான் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement