திருப்புவனத்தில் குழாய் சேதம்: வீணாகும் குடிநீர்

திருப்புவனம்: திருப்புவனத்தில் அடிக்கடி கூட்டு குடிநீர் திட்ட குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வரும் நிலையில் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருப்புவனம் நகர், மணலுார், சிலைமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிதாக குடிநீர் குழாய் சமீபத்தில் பதிக்கப்பட்டது. பல இடங்களில் குழாய்கள் குடிநீர் விநியோகத்தின் போது அழுத்தம் தாங்காமல் உடைந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறி வீணாகிறது.

குழாய்கள் சேதமடைந்தது குறித்து புகார் அளித்தாலும் சேதமடைந்த பகுதியை சரி செய்யாமல் பிளாஸ்டிக் சாக்கு, தார்ப்பாய் ஆகியவற்றை வைத்து கட்டி சரி செய்கின்றனர்.

நிரந்தரமாக உடைப்பை சரி செய்வதில்லை. இதனால் தினசரி குடிநீர் வீணாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தட்டான்குளம் என்ற இடத்தில் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகியது.

வைகை ஆறு வழியாக குழாய் பதிக்கப்பட்டு நகரினுள் இருபக்கமாக குழாய்கள் பிரித்து பதிக்கப்பட்டுள்ளன. இதில் வைகை ஆற்றில் பிரமனுார் கால்வாயை ஒட்டி பதிக்கப்பட்ட குழாய் உடைந்து தண்ணீர் கடந்த பல மாதங்களாக வீணாக வெளியேறி ஆற்றினுள் செல்கிறது.

குழாய் சேதமடைந்தது குறித்து தகவல் கொடுத்தும் அதிகாரிகள் தார்ப்பாய் வைத்து கட்டி அதன்மேல் கற்களை வைத்து விட்டு சென்றுள்ளனர்.

அழுத்தம் காரணமாக கற்களும் விழுந்து மீண்டும் தண்ணீர் பீறிட்டு வெளியேறி வருகிறது.

Advertisement