தர்மபுரியில் புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட்; காணொளியில் திறந்த முதல்வர் ஸ்டாலின்

தர்மபுரி: தர்மபுரி அருகே, சோகத்துாரில், தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட, புதிய புறநகர் பஸ் ஸ்டாண்டை, தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தர்மபுரி டவுனில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தனியார் பங்களிப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி நகராட்சிக்கு அருகே சோகத்துார் பஞ்., ஏ.ரெட்டிஹள்ளியில், 10 ஏக்கரில், 39.14 கோடி ரூபாய் மதிப்பில், புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட் பணிகள் தொடங்கி முடிக்கப்பட்டன.

இதில், தரைதளம் மற்றும் முதல் தளத்தில் கடைகள், ஓட்டல்கள், ஏ.டி.எம்., மையம், பொருட்கள் பாதுகாப்பு அறை, கழிப்பறைகள், நேர காப்பாளர் அறை, தாய்மார்கள் பாலுாட்டும் அறை, பயணிகள் மற்றும் ஓட்டுனர்கள் ஓய்வு அறைகள், 55 பஸ்கள் நிறுத்துமிடம், நடைபாதை, பிரதான சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் போன்ற பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய புறநகர் பஸ் ஸ்டாண்டை நேற்று, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, காணொளி காட்சி மூலம், தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, தர்மபுரி புதிய புறநகர் பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சதீஸ், 2 வழித்தட பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் மணி, வெங்கடேஸ்வரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement