அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம்: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி

12


நியூயார்க்: வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அரசுத்துறை வெளியிட்ட இந்திய வரைபடம் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.


இந்தியாவும், அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படைகள் தொடர்பாக இரு நாடுகளும் இன்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தால் ஏற்படக்கூடிய பலன்கள் தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் இன்று காலை வரைபடத்துடன் கூடிய ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா வரிக்குறைப்பு செய்ய இருக்கும் பொருட்கள் தொடர்பான பட்டியலுடன் நம் நாட்டின் வரைபடமும் அந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

முதல் முறையாக முழுமையான ஜம்மு காஷ்மீரும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதுதான் நமது நிலைப்பாடு.
ஆனால் இத்தனை ஆண்டு காலமாக அமெரிக்காவின் அரசுத்துறைகள் வெளியிட்ட பல்வேறு வரைபடங்களும் பாகிஸ்தானுடைய நிலைப்பாட்டுக்கு தகுந்தபடியே இருந்தன. அவற்றை இந்திய அரசு தொடர்ந்து ஆட்சேபித்துக் கொண்டே இருந்தது. ஆனால், அவற்றை அமெரிக்க அரசு கண்டுகொள்ளவே செய்யாது. இது தான் இத்தனை ஆண்டுகளாக நடந்தது.



இப்போதுதான் முதல் முறையாக பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரும் இந்திய நிலப்பரப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் அக்சய் சின் பகுதியும் இந்திய நிலப்பரப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அரசும், அந்நாட்டு ராணுவ தளபதி அசீம் முனீரும் டிரம்ப் அரசை தாஜா செய்வதற்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகி உள்ளன.


கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் மூன்று முறை அமெரிக்கா சென்று உள்ளார். அந்நாட்டு அரசு, அதிபர் டிரம்புக்கு நோபல் அமைதி பரிசு வழங்குவதற்காக பரிந்துரையும் செய்தது.

இந்த கூழைக்கும்பிடு முயற்சிகள் அனைத்தையும் வீணாக்குவது போல் இப்போது அமெரிக்க வர்த்தகத் துறை வரைபடம் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா வெளியிட்டுள்ள வரைபடமானது, இந்தியா தொடர்பான அந்நாட்டு அரசின் எண்ணத்தில், செயல்பாட்டில் இருக்கும் மாற்றத்தை குறிப்பிடுவதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement