அதிகாலை பயணத்தால் விபரீதம்; பஸ் மீது லாரி மோதியதில் 6 பேர் பலி

லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் யமுனா விரைவுச் சாலையில் பஸ் மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.



உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவிலிருந்து கான்பூர் தேஹத் மாவட்டத்தில் உள்ள ரசூலாபாத்திற்கு பஸ் சென்று கொண்டிருந்தது. யமுனா விரைவுச்சாலையில் நடுவழியில் பஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி வேகமாக வந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் சோனு (32), தேவேஷ் (32), அஸ்லாம் (27), சந்தோஷ் (45), அனுராக் (27) மற்றும் பிரமோத் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் சிவகாந்த் துபே என்பவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.



இந்த விபத்து அதிகாலை 3 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம் , அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர் , தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் . இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Advertisement