காங்கிரசை கூட்டணியில் சேர்க்கலாமா; சீமானிடம் ஆலோசித்த விஜய்

12

சென்னை: காங்கிரசை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாமா என்று நடிகர் விஜய் தம்மிடம் கேட்டதாகவும், அதற்கு தாம் அளித்த பதில் என்ன என்றும் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் வெளியிட்டு உள்ளார்.

சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;

காங்கிரசை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாமா என்று தம்பி (நடிகர் விஜய்யை குறிப்பிடுகிறார்) என்னிடம் கேட்டார். அப்போது காங்கிரசை சேர்த்துக் கொண்டு என்ன அரசியல் பேசுவது என்று நான் கேட்டேன். அவர் அதை கவனித்தார்.

கச்சத்தீவு என்று பேசுவீர்களா? காவிரி நதிநீர் உரிமை என்று பேசுவீர்களா? இல்லை... மீத்தேன், ஈத்தேன் என நிலவளத்தை சுரண்டுகிறது என்று பேசுவீர்களா? கல்வி மாநில உரிமை, அதை எடுத்துக் கொண்டு போனது எப்படி என்று பேசுவீர்களா? சரக்கு மற்றும் சேவை வரி கொண்டு வந்தது யார்?

நீட் தேர்வை திணித்தது யார்? நமது மாநில உரிமைகளை எல்லாம் பறித்துக் கொண்டு போனார்கள். அந்த உரிமைகளை எடுத்துக் கொண்டு போனது யார்?

ஒரு தேசிய இனம் தமது விடுதலைக்கு போராடியது. அந்த விடுதலையை அழித்து நாசம் ஆக்கியது யார்? கட்சி யார்? அந்த அதிகாரம் யார்? அந்த (காங்கிரசை குறிப்பிடுகிறார்) கட்சியை சேர்த்துக் கொண்டு எந்த அரசியலை பேசுவது?

ஹிந்தி திணிப்பா? ஹிந்தி எதிர்ப்பா? ஹிந்தியை திணித்த மகான் யார்? எல்லாம் அவர்கள் (காங்கிரஸ்) தான். இப்போது பாஜ என்ன மதவாதமா? அப்படி என்றால் மிதவாதமா காங்கிரஸ்? பாபர் மசூதியை இடித்தது யார்? இடிக்க அனுமதித்தது யார்? காங்கிரஸ்... அப்போ என்ன பேசுவது?

கொலை செய்பவனை விட, அவன் குத்துவதற்கு என்னை பிடித்துக் கொண்டு நின்றான் பாரு... அவன்தான் பெருங்கொடுங்கோலன். விடுதலை பெற்ற இந்தியாவை அரை நூற்றாண்டு காலம் ஆண்ட கட்சி. இந்த நாடு மீள முடியாத ஏழ்மை, வறுமையிலும், ஊழல், லஞ்சத்திலும் ஊறி திளைக்கிறது அதற்கு காரணம் யார்?

196 லட்சம் கோடி ரூபாய் கடனை தொடுகிறது. இதற்கு யார் பொறுப்பேற்கணும். கடன் வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி, ஜிடிபி ஏறுகிறது.... எங்கே ஏறுகிறது. நாட்டின் வளர்ச்சி என்று கடன் வளர்ச்சியை நீங்கள் கட்டமைக்கிறீர்கள்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்று எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு இந்த பொருளாதார கொள்கைகளை ஏற்றுக் கொண்டது இந்த இரு(காங், பாஜ)கட்சிகளும் தானே. அறிவை வளர்க்கும் கல்வி, உயிரை காப்பாற்றும் மருத்துவம்,குடிநீர் வினியோகம், போக்குவரத்து, வானுர்தி நிலையம் நடத்துவது என எல்லாம் தனியார் என்றால் அரசின் வேலை என்ன என்ற கேள்வி எழுகிறது.

தம்பி (விஜய்) அதை(காங்கிரசுடன் கூட்டணி சேர்வதை குறிப்பிடுகிறார்) நினைக்கிறார்.. எங்களுக்கு காங்கிரஸ், இந்திய கட்சிகள், திராவிட கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு இல்லை. இதற்கு மாற்றாக தான் இந்த நிலத்தில் இந்த அரசியலை கட்டி எழுப்புகிறோம்.

இவ்வாறு சீமான் பேட்டியளித்தார்.

பனையூர் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என்று அவர்கள்(தவெகவினர்) விருப்ப மனு தாக்கல் செய்துள்ளது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், பனையூர் என்ற தொகுதி இல்லை என்பது பிள்ளைகளுக்கு (தவெகவினர்) தெரியவில்லை. அவர்கள் சிறு பிள்ளைகள். இது வியாபாரம் இல்லை.. விற்பனை பண்டம் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். பனையூர் தொகுதி என்று ஒன்று இல்லை என்பது அவர்களுக்கு தெரியவில்லை. போக, போக அவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்று பதிலளித்தார்.

Advertisement