திமுக பிரசாரத்திற்கு 125 நாள் வேலை திட்ட பணியாளர்களை பயன்படுத்துவதா? இபிஎஸ் கடும் கண்டனம்

சென்னை: 125 நாள் வேலை திட்ட பணியாளர்களை திமுக அரசு தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை; தமிழகம் முழுதும் உள்ள மாவட்ட திட்ட அலுவலர்கள் ஆணையின்படி, மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் பணித்தளப்பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள்” வீடு வீடாகச் சென்று, திமுக ஆட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருவது சட்ட விரோதமானது.

மாவட்ட கலெக்டர்கள், திமுக அரசுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடும் ஊராட்சி செயலாளர்கள், 125 நாள் வேலை உறுதித் திட்ட பணித்தளப் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மேலும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கிறேன். கிராமப் பஞ்சாயத்தின் வளர்ச்சிக்காக பணிபுரியும் கிராம செயலாளர்கள் மற்றும் கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் பணித்தளப் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்களை, திமுக அரசு தங்களது சுய லாபத்திற்காக, தேர்தல் பிரசார வேலைகளில் ஈடுபடுத்துவதற்கு எனது கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், தேர்தல் பிரச்சார வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலினின் பெயிலியர் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement