பிரதமரை தாக்க திட்டம்; சபாநாயகர் கண்டுபிடித்தது எப்படி?

56


ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து, லோக்சபாவில் பிரதமர் பேசுவது வழக்கம். ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பேச்சுக்கு, கடந்த 4ம் தேதி மாலை 5:00 மணிக்கு உரையாற்ற இருந்தார் பிரதமர் மோடி. ஆனால், லோக்சபாவில் நடந்த கூச்சல் குழப்பத்தால் அவர் வரவில்லை. 'எதிர்க்கட்சி பெண் எம்.பி.,க்கள், இருக்கைக்கு வந்து தாக்கலாம் என்பதால், பிரதமர் மோடியை வர வேண்டாம்' என, கேட்டுக் கொண்டதாக விளக்கம் அளித்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.

'என்ன நடந்தது?' என்பது குறித்து உள்துறை அமைச்சகத்தில் பேசப்படுவது இது தான். அமைச்சர் அமித் ஷாவிடம் உளவுத் துறை, 4ம் தேதி மாலை ஒரு அறிக்கை அளித்தது. அதில், 'பெண் எம்.பி.,க்கள் ஜோதிமணி, சுதா மற்றும் சிலர் சபையில் பிரதமர் மோடி இருக்கைக்கு அருகே வர திட்டம் தீட்டியுள்ளனர். இதனால், பிரதமருக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது' என, குறிப்பிடப்பட்டிருந்ததாம்.


அத்துடன், எதிர்க்கட்சி பெண் எம்.பி.,க்கள் இது தொடர்பாக என்ன பேசினர் என்ற ஆடியோவையும், அமித் ஷாவிடம் உளவுத் துறை சமர்ப்பித்ததாம். இதை, உடனே சபாநாயகருக்கு தெரிவித்தாராம் அமித் ஷா.



தவிர, பார்லி.,யில், 300க்கும் அதிகமான, 'சிசிடிவி'க்கள் உள்ளன. ஒருவர் பார்லி.,க்குள் வந்து வெளியேறும் வரை, அவர் என்ன செய்கிறார் என்பதை, 'ஏ.ஐ.,' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், இந்த சிசிடிவி தெரிவித்து விடும். மாலை 3:00 மணிக்கு, 10 பெண் எம்.பி.,க்கள் காங்., முக்கிய தலைவருடன், பார்லி.,யில் ஆலோசனை நடத்தி இருப்பதும் தெரிய வந்தது. இதையெல்லாம் வைத்து தான், 'பிரதமருக்கு ஆபத்து வரும்' என, சபாநாயகரும் உணர்ந்து கொண்டாராம்.


மாலை 5:00 மணிக்கு பிரதமர் சபைக்கு வருகிறார் என தெரிந்ததும், ஜோதிமணி, சுதா மற்றும் மஹாராஷ்டிர எதிர்க்கட்சி பெண் எம்.பி.,க்கள், கைகளில் பதாகைகளுடன் பிரதமர் அமரும் இருக்கை அருகே சென்றனர். அப்போது அங்கிருந்த பா.ஜ., - எம்.பி., ரவிசங்கர் பிரசாத், 'எதற்கு பிரதமர் இருக்கைக்கு அருகே நிற்கிறீர்கள்?' என கேட்க, 'அவருக்கு ஒரு புத்தகம் பரிசாக தருவதற்காக காத்திருக்கிறோம்' என, பெண் எம்.பி.,க்கள் கூறினராம்.

Advertisement