இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா வரி குறைத்துள்ளது: மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான்

2

போபால்: இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயிகளின் நலன் உறுதி செய்யப்பட்டு உள்ளது எனவும், நமது நாட்டு விவசாயப் பொருட்கள் பலவற்றிற்கு அமெரிக்கா வரியை ரத்து செய்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.


இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், விவசாயம் சார்ந்த பல பொருட்கள் இந்தியாவிற்கு ஏற்றமதி அதிகரிக்கும் என அமெரிக்கா கூறியுள்ளது.


இது தொடர்பாக போபாலில் நிருபர்களை சந்தித்த மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது: நாட்டை தலைகுனிய விட மாட்டேன், விவசாயிகள் நலனிற்கு எந்த வகையிலும் இடையூறு செய்ய மாட்டேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் அது உறுதி செய்யப்பட்டு உள்ளது. விவசாயம் மற்றும் விவசாயம் பொருட்களை பார்த்தால், விவசாயிகளை நலனுக்கு துன்புறுத்தும் வகையில் எந்த பொருட்களும் வர்த்தக ஒப்பந்தத்தில் இல்லை. இந்த பொருட்களுக்கு வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.


சோயா பீன்ஸ், மக்காச்சோளம், அரிசி, கோதுமை, சர்க்கரை, தானியங்கள், கோழி இறைச்சி, பால் பொருட்கள், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, பச்சைப் பட்டாணி, கொண்டைக்கடலை, பாசிப்பயிறு எண்ணெய்வித்துகள், எத்தனால், புகையிலை போன்ற பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படவில்லை. நமது முக்கியப் பயிர்கள், பழங்கள், கால்நடைப் பொருட்களுக்கு அமெரிக்காவிற்கு நமது கதவுகள் திறந்து விடப்படவில்லை. தயிர், மோர், வெண்ணெய், நெய், பனீர் அல்லது பாலாடைக்கட்டி உள்ளிட்டவை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படாது.


இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல விவசாய பொருட்களுக்கு வரி பூஜ்ஜியம். ஆனால், பல விவசாயப் பொருட்களுக்கு இந்திய சந்தையில் இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. நமது நாட்டை சேர்ந்த பல விவசாய பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 50 ல் இருந்து பூஜ்ஜியம் ஆக குறைத்துள்ளது. நமது மசாலா பொருட்கள் ஏற்றுமதி 88 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மசாலா அல்லது மசாலா சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


நமது விவசாயிகளுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஜவுளித்துறையில், நமக்கான வரியானது, போட்டி நாடுகளை காட்டிலும் குறைவு. சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களும், இந்த ஒப்பந்தத்தால் பலன் பெறுவார்கள். பிரதமர் மோடி தலைமையில் பல தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இன்னும் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement