தீவன தட்டுப்பாட்டை போக்க 53 டன் சோளம் விதை


ஈரோடு: கால்நடை தீவன பற்றாக்குறையை போக்கும் விதமாக, 53,596 கிலோ சோளம் விதை வழங்கப்பட்டுள்ளது.


கோடை காலத்தில் கால்நடை தீவன தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். இதை தவிர்க்க முன்கூட்டியே விவசாயிகள், சோளத்தட்டுகளை சாகுபடி செய்து சேகரிப்பது வழக்கம். கால்நடை தீவன பற்றாக்குறையை போக்கவும், விலையை எதிர்பார்த்தும் விவசாயிகள் சோள பயிரை பயிரிட்டுள்ளனர்.


ஈரோட்டை சுற்றியுள்ள வைரபாளையம், எல்லப்பாளையம், கொங்கம்பாளையம்
உள்ளிட்ட பல்வேறு பகுதிகள், வெள்ளோட்டை சுற்றியுள்ள கனகபுரம் உள்ளிட்ட கிராமங்கள், பவானியை சுற்றியுள்ள தொட்டிபாளையம், நல்லிபாளையம், அந்தியூரை சுற்றியுள்ள மைக்கேல்பாளையம், குருவரெட்டியூர் பகுதிகளில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து தொட்டிபாளையத்தை சேர்ந்த ஒரு விவசாயி கூறியதாவது: கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படாத வகையில், ஆண்டுதோறும் தீவனப் பயிர்கள் சாகுபடி மேற்கொள்கிறோம். எதிர் வரும் கோடை காலத்தை சமாளிக்க, சோளம் சாகுபடி செய்திருக்கிறோம்.


ஒரு சில நாட்களில் அறுவடை தொடங்கவுள்ளோம். மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்., முதல் தற்போது வரை, 53,596 கிலோ சோளம் விதை, மாவட்ட வேளாண் அலுவலகத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Advertisement