ஜப்பானில் மீண்டும் ஆட்சியை பிடித்தார் பிரதமர் தகாய்ச்சி

டோக்கியோ: ஜப்பானில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் பிரதமர் சனே தகாய்ச்சியின் ஆளும் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.


கிழக்காசிய நாடான ஜப்பானில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பார்லிமென்ட் தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த 2024ல் நடந்த தேர்தலில், எல்.டி.பி., எனும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்கவில்லை.


இதையடுத்து, அப்போதைய பிரதமர் ஷிகேரு இஷிபா, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை அரசை நடத்தினார். ஓராண்டு காலம் பதவி வகித்த அவர், ஊழல் குற்றச்சாட்டுகளில், கடந்தாண்டு அக்டோபரில் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகாய்ச்சி பொறுப்பேற்றார்.


பார்லிமென்டில் தன் கட்சிக்கான பிரதிநிதித்துவம் பெரும்பான்மைக்கும் குறைவாக இருப்பதால், நிலையான மற்றும் ஒரு வலிமையான அரசை அமைக்க வேண்டும் என்ற நோக்கில், பதவியேற்ற நான்கே மாதங்களில் பார்லிமென்டை கலைத்து தேர்தலை அறிவித்தார்.



அதன்படி, நேற்று ஓட்டுப் பதிவு நடந்தது. மொத்தமுள்ள 465 இடங்களுக்கான தேர்தலில் பிரதமர் தகாய்ச்சியின், எல்.டி.பி., கட்சி கூட்டணி சூப்பர் மெஜாரிட்டி எனும் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை வெற்றியை பெற்றுள்ளது. 1986ம் ஆண்டுக்கு பின் அந்த கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.


@block_B@

தாய்லாந்திலும் ஆளும் கட்சி வெற்றி




தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்திலும், ஜப்பானைப் போன்றே முன் கூட்டியே பார்லிமென்ட் தேர்தல் நேற்று நடந்தது. மொத்தமுள்ள 500 இடங்களுக்கான தேர்தலில், 50க்கும் மேற்பட்ட கட்சிகள் போட்டியிட்டாலும், அதிகாரம் யாருக்கு என்பதில் மூன்று முக்கிய கட்சிகளுக்கு இடையேதான் பலத்த போட்டி நிலவியது. இந்நிலையில், பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் தலைமையிலான பூம்ஜெய்தாய் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதால் ஆட்சியை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.block_B

@block_G@

போர்ச்சுகல் அதிபர் யார்? இன்று வெளியாகிறது முடிவு



தென்மேற்கு ஐரோப்பிய நாடான போர்ச்சுகல் அதிபர் தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. இதில் போட்டியிட்ட தீவிர வலதுசாரி வேட்பாளரான ஆண்ட்ரே வென்ச்சுரா, இடதுசாரி வேட்பாளரான அன்டானியோ ஜோஸ் செகுரோ போட்டியிட்டனர். முதல் சுற்றில் வென்ச்சுரா 23.52 சதவீதமும், செகுரோ 31.10 சதவீத ஓட்டுகளை பெற்றனர். யாருக்கும், 50 சதவீத ஓட்டுகள் கிடைக்காததால், நேற்று இரண்டாவது சுற்று தேர்தல் நடந்தது. போர்ச்சுகலில் 1986ம் ஆண்டுக்கு பின், அதாவது 40 ஆண்டுகளுக்கு பின் அதிபர் தேர்தல் இரண்டாவது சுற்றுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். அண்மையில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் செகுரோ 70 சதவீத ஓட்டுகளுடன் மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.block_G

Advertisement