சாலை குறியீடு கம்பங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி துவக்கம்

உத்திரமேரூர்: காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையோரத்தில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில், அமைக்கப்பட்டுள்ள சாலை குறியீடு கம்பங்களுக்கு வெள்ளை மற்றும் கருப்பு நிற வர்ணம் தீட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், ஊர் பெயர் பலகை, மும்முனை, நான்கு முனை சந்திப்பு, அபாயகரமான சாலை வளைவு, வேகத்தடை, மாணவர்கள் சாலையை கடக்கும் பகுதி என, பல்வேறு இடங்களில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலை குறியீடு எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

எச்சரிக்கை குறியீடு பலகை பொருத்தப்பட்டுள்ள கம்பங்கள் துருப்பிடித்து, பொலிவிழந்த நிலையில் இருந்தன. இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலை குறியீடு பலகை பொருத்தப்பட்டுள்ள கம்பத்தின் மீது மோதி விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

எனவே, சாலை குறியீடு கம்பங்களுக்கு வர்ணம் தீட்ட வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, காஞ்சிபுரம் உபகோட்டம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு நெடுஞ்சாலைத் துறை சார்பில், முதற்கட்டமாக ஓரிக்கை பாலாறு மேம்பாலத்தில் இருந்து, வெங்கச்சேரி செய்யாற்று பாலம் வரை, சாலையோரத்தில் உள்ள குறியீட்டு பலகை பொருத்தப்பட்டுள்ள கம்பங்களுக்கு வெள்ளை மற்றும் கருப்பு நிற வர்ணம் தீட்டும் பணி துவக்கப்பட்டு நடந்து வருகிறது.

Advertisement