துாய்மைப்பணியாளர் பேரன் சிகிச்சைக்கு மேயர் உதவி

திருப்பூர்: திருப்பூர் மேயர் தினேஷ்குமாரிடம், பெண் துாய்மைப் பணியாளர் புஷ்பா, தனது மகள் செந்தாமரையின் 15 வயது மகன், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடுவதாக கண்ணீர்மல்க தெரிவித்தார். பிச்சம்பாளையத்தில் உள்ள புஷ்பாவின் வீட்டுக்கு சென்று, உரிய விவரங்களைக் கேட்டறிந்த மேயர் தனது சொந்த பணம் 30 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.

சிறுவன் தற்போது தனியார் மருத்துவமனையில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் டயாலசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பள்ளிக்குச் செல்லவில்லை.

சிறுவனின் தந்தை ராஜமாணிக்கம் ஒரு சிறுநீரகத்தை வழங்க தயாராக உள்ளார். சுகாதாரத்துறை அமைச்சரிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து, சென்னை ராஜிவ் பொதுமருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உரிய ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

சிறுவனை சென்னை அழைத்துச் சென்று இந்த சிகிச்சை செய்து அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளதாக மேயர் தெரிவித்தார்.

Advertisement