சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு; தங்க தகடுகளை மறுஆய்வு கேரளா ஐகோர்ட் உத்தரவு

1

நமது நிருபர்



சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை விசாரித்த கேரளா ஐகோர்ட், தங்கத் தகடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.


கேரளாவின் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில், 2019ல் புனரமைப்பு பணிகள் நடந்தன . கருவறை முன்பிருந்த துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள் புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. தங்கமுலாம் பூசப்பட்டு மீண்டும் அணிவிக்கும்போது , துவார பாலகர் சிலைகளின் தங்க கவசத்தில் இருந்து நான்கு கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது . கருவறை கதவுகளில் இருந்தும் தங்கம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

11 பேர் கைது



இந்த வழக்கில் பராமரிப்பு பணிக்கு தலைமை தாங்கிய உன்னி கிருஷ்ணன் போத்தி, சபரிமலையில் பணியாற்றிய நிர்வாக அதிகாரி முராரி பாபு , செயல் அலுவலர் சுதீஷ்குமார், திருவாபரணம் ஆணையர் பைஜூ, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்னாள் ஆணையர் மற்றும் தலைவர் வாசு , தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் பத்ம குமார் , நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், பெல்லாரி ஜுவல்லரி உரிமையாளர் கோவர்தன், தந்திரி கண்டரரு ராஜீவரரு உட்பட 11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

மறு ஆய்வு



கேரள ஐகோர்ட்டின் உத்தரவை அடுத்து , சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை இன்று (பிப்ரவரி 09) நீதிபதிகள் ராஜா விஜயராகவன், கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தங்கம் திருட்டு வழக்கை விசாரித்த கேரளா ஐகோர்ட் தங்க தகடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

இந்த மறு ஆய்வு, பாபா அணு ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்த தேசிய பரிசோதனை மையத்துக்கு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement