தினமலர் செய்தி எதிரொலி; நெல் கொள்முதல் மையம் திறப்பு

தென்காசி: புளியரை பகுதியில் அரசு கொள்முதல் மையம் மூடிக்கிடப்பதால் நெல் அறுவடை செய்த விவசாயிகள் அவற்றை பாதுகாக்க சிரமப்பட்டது தொடர்பாக நமது நாளிதழில் இன்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவின் பேரில் கொள்முதல் மையம் செயல்பட துவங்கியது.



தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் மையம் உள்ளது. பிசான நெல் சாகுபடியில் தற்போது அறுவடை நடக்கும் நிலையில் இங்கு நெல் கொள்முதல் செய்யப்படாமல் மையம் மூடிக்கிடக்கிறது. இதனால் விவசாயிகள் நெல்லை பாதுகாக்க முடியாமல் மையத்தின் அருகே குவித்து வைத்துள்ளனர்.


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள புளியரையில் அடிக்கடி மழை பெய்யும்; வெயிலுக்கும் குறைவில்லை. இதனால் மையம் அருகே குவித்துள்ள நெல் சேதமடையும் வாய்ப்புள்ளது. எனவே மற்ற இடங்களைப்போல புளியரை மையத்தையும் திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்புடன் இருந்தனர்.


இது குறித்து இன்று நமது நாளிதழில் செய்தி வெளியானது. கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவின் பேரில், கொள்முதல் மையம் செயல்பட துவங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement