'அமெரிக்க வரி உயர்வுக்கு பிறகும் பின்னலாடை ஏற்றுமதி சரியவில்லை'

திருப்பூர்: ''அமெரிக்க வரி உயர்வுக்கு பிறகும், இறக்குமதியாளரின் வரிச்சுமையை, ஆடை ஏற்றுமதியாளர்கள் பகிர்ந்து கொண்டதால், நாட்டின் பின்னலாடை ஏற்றுமதி சரியவில்லை'' என, தொழில்துறையினர் தெரிவித்தனர்.

இந்திய பொருள்களுக்கான இறக்குமதி வரியை, அமெரிக்கா திடீரென உயர்த்தியதால், அந்நாட்டு வர்த்தகர்களுக்கு வரிச்சுமை ஏற்பட்டது. வர்த்தக உறவை தக்கவைக்க, இந்திய ஏற்றுமதியாளர்கள், வரிச்சுமையை, 25 சதவீதம் வரை பகிர்ந்து கொண்டனர்; இதன் காரணமாக, பெரிய சரிவு ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

இந்திய பின்னலாடை ஏற்றுமதி, 2023 - 24ல், 55,798 கோடி ரூபாயாக இருந்தது; 2024 - 25ல், 65,178 கோடி ரூபாயாக உயர்ந்தது. அமெரிக்க இறக்குமதி வரி உயர்வால், சிறிய குழப்பம் ஏற்பட்டது.

இதன் காரணமாக, கடந்த ஆண்டு செப்., மாதம் 250 கோடி ரூபாயும், அக்., மாதம், 559 கோடி ரூபாயும் ஏற்றுமதி குறைந்தது.

இறக்குமதியாளருடன் வரிப்பகிர்வு செய்து கொண்டதால், தேங்கிய ஆடை ஏற்றுமதி மீண்டும் வேகமெடுத்தது; நவ., மாத ஏற்றுமதி, 904 கோடி ரூபாய் அதிகரித்தது. பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், ஏப்., முதல் நவ., வரை, 2024 - 25ம் நிதியாண்டில், 41,905 கோடி ரூபாய்க்கு நடந்தது; நடப்பு ஆண்டில், 45,210 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இதன் வாயிலாக, முந்தைய ஆண்டை காட்டிலும் 8 மாதங்களில், ஏற்றுமதி 3,305 கோடி அதிகரித்ததாக மத்திய வர்த்தக அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில்,''ஆர்டர் மீதான உற்பத்தியை முடித்த பிறகுதான், அமெரிக்க வரி உயர்த்தப்பட்டது. உற்பத்தியான ஆடைகளை இருப்பு வைக்க முடியாது என்பதால், 25 சதவீதம் வரை தள்ளுபடி கொடுத்து, அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகத்தில் சரிவு ஏற்படவில்லை'' என்றார்.

Advertisement