அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி; ராமதாஸ் 'திடுக்'!

10


விழுப்புரம்: என்னை அரசியலில் இருந்து ஒழித்துவிட வேண்டும் என்று எதை எதையோ பேசுகின்றனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: ஒரு பொய் கூட்டம், பொய்யும் புரட்டுமே அரசியலாக நடத்திக் கொண்டு இருக்கிறது. நாங்கள் அந்த கூட்டத்தை கட்சியில் இருந்தே நீக்கி விட்டோம். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டோம். அவர்களோடு சேர்ந்த சில கூட்டங்கள் பொய், பொய்யாக பேசுகிறது. இட்டுக்கட்டி பேசுவது, ஏளனமாக பேசுவது, மனம் புண்படும் வகையில் பேசுவது ஆகியவற்றை செய்கிறது.



என்னை மட்டுமல்ல 26 ஆண்டு காலம் ஓய்வின்றி உழைத்த கவுரவ தலைவர் ஜிகே மணியையும் வசை பாடுபவதை தொழிலாக செய்து வருகிறது. பொய்யர்கள் கூட்டம், அரசியல் பேசாமல் என்னை அரசியலில் இருந்தே ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் எதை, எதையோ பேசுகிறார்கள். டில்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷனில் இருக்கும் சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு வழக்கு போடுகின்றனர். தேர்தல் கமிஷனை ஒரு வழக்கு போடுவது வேடிக்கையிலும், வேடிக்கை. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Advertisement