ராணுவத்தினர் வீடு ஒதுக்கீட்டில் மத்திய அரசு அதிரடி திருத்தம்

புதுடில்லி: ராணுவ அதிகாரிகளுக்கான அரசு வீடு ஒதுக்கீட்டிற்கு, 'குடும்பம்' என்பதற்கான வரையறையை மத்திய அரசு விரிவாக்கியுள்ளது.

அதாவது கூட்டுக் குடும்ப கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில், அதிகாரியின் மனைவி, குழந்தைகளுடன், உடன் பிறந்தோர், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளும் குடும்பம் என்ற அந்தஸ்தை பெறுவர்.

நம் ராணுவத்தில் அதிகாரிகளாக சேவையாற்றி வருவோருக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்து வருகிறது.

பழைய முறைப்படி அதிகாரியின் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டுமே அந்த வீட்டில் தங்குவதற்கு உரிமை உண்டு. ஏனெனில், குடும்பம் என்றால், அதிகாரியின் மனைவி, குழந்தைகள் மட்டுமே என அங்கீகரிக்கப்பட்டது.

இதனால், வயதான பெற்றோரை உடன் வைத்திருந்த பராமரிக்க முடியாமல் ராணுவ அதிகாரிகள் சிரமம் அடைந்தனர். அதே போல், தனியாக வாழும் பெண் அதிகாரிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டது.

இந்தச் சூழலில், பெற்றோரை பாதுகாப்பது பிள்ளைகளின் கடமை என்ற சட்டத்தை மதிக்கும் வகையில், குடும்பம் என்ற வரையறையை மத்திய அரசு விரிவாக்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதன்படி ராணுவ அதிகாரிக்கு ஒதுக்கப்படும் வீட்டில் இனி அவரது மனைவி, குழந்தைகளுடன், உடன் பிறந்தவர்கள், பெற்றோர், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளும் தங்கலாம். இவர்களும் குடும்பம் என்ற வரையறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Advertisement