இதே நாளில் அன்று

பிப்ரவரி 13: திண்டுக்கல் மாவட்டம், கூவக்காப்பட்டி கிராமத்தில், முனியப்பன் - சின்னக்கண்ணம்மாள் தம்பதியின் மகனாக, 1951, செப்டம்பர் 12ல் பிறந்தவர், மு.சிவலிங்கம்.

இவர், தன் ஊரிலும், வேடசந்துார் பள்ளியிலும் படித்தார். பின், சிவகாசி அய்ய நாடார் கல்லுாரி, மதுரை காமராஜர் பல்கலை உள்ளிட்டவற்றில், எம்.எஸ்சி., கணிதம்; எம்.ஏ., தமிழ் இலக்கியம்; எம்.எல்., தொழிலாளர் சட்டம்; எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., பட்டங்களை பெற்றார்.

பின், கல்லுாரிகளில் கணினி அறிவியல் விரிவுரையாளராக பணியாற்றினார். மரபுக்கவிதை, புதுக் கவிதை நுால்களை வெளியிட்டார். 'சகாப்தம்' என்ற இதழை நடத்தினார்.

பள்ளி, கல்லுாரிகளுக்கான கணினி அறிவியல் நுால்களையும், பத்திரிகைகளில் கட்டுரைகளையும் எழுதினார். 'இணையம் இனிது, கணிப்பொறித்தமிழ், கணிப்பொறி கலைச்சொல் அகராதி' உள்ளிட்ட நுால்கள், கணினி தமிழுக்கு இவர் ஆற்றிய சேவைக்கு சாட்சியாக உள்ளன. இவர், தன் 72வது வயதில், 2024ல், இதே நாளில் மறைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!

Advertisement